கொரோனாவிற்கு எதிராக மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கும் ஷார்ஜா அரசு..!! மால், சினிமா, ஜிம் ஆகிய இடங்களுக்கான வழிமுறைகள் வெளியீடு..!!
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டு துறை அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ள புதிய வழிமுறைகளின்படி, ஷார்ஜாவில் உள்ள சினிமாக்கள், ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் ஜிம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்:
- சினிமாக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் ஆகிய இடங்களில் அதிகபட்சம் 50 சதவீத திறனில் மட்டுமே இயங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு நபருக்கிடையே இரண்டு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
- ஷாப்பிங் சென்டர்களும் மால்களும் 60 சதவீத திறனிலேயே இயங்க வேண்டும் மற்றும் பார்வையாளர்களிடையே இரண்டு மீட்டர் தூரத்தை கடைபிடிக்க வேண்டும்.
- உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஒவ்வொரு மேசைக்கும் இடையில் இரண்டு மீட்டர் தூரத்தை விட வேண்டும், மேலும் ஒரே மேசையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர நான்கு நபர்களுக்கு மேல் உட்கார அனுமதிக்கப்பட மாட்டாது.
- ஜிம்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் 50 சதவீத திறனில் இயங்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் முக கவசங்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டு துறை வலியுறுத்தியுள்ளது.
மேலும், திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொறுத்தவரை, இதுபோன்ற நிகழ்வுகள் 20 க்கும் மேற்பட்ட நபர்களின் பங்கேற்பை உள்ளடக்கியதாக இருக்கக்கூடாது. இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் அந்த இடத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் இடையே நான்கு மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.