லைஃப் ஸ்டைல்

UAE: உலகையே திரும்பி பார்க்க வைத்த மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர்..!! அப்படி என்ன இருக்கின்றது..?? அனைத்து தகவல்களும் உள்ளே..!!

துபாயின் மிக அழகிய அருங்காட்சியகமான மியூசியம் ஆஃப் தி ஃப்யூச்சர் பிப்ரவரி 22 ம் தேதி திறக்கப்பட்டது. பொதுவாக அருங்காட்சியகம் என்றாலே பழமையான பொருளை காட்சிக்கு வைத்திருப்பார்கள். ஆனால் இந்த மரபை உடைத்து பல்வேறு துறைகளில் உலகின் எதிர்காலத்தை இன்றே கணித்து அதனை மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது இந்த எதிர்காலத்தைக் கூறும் அருங்காட்சியகம். இதனைப் பற்றிய முழு தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ளவே பிரத்யேகமாக இந்த பதிவை கொடுத்துள்ளோம்.

அமைப்பு

நீள் வட்ட வடிவில் கண் போன்று அமைக்கப்பட்டிருக்கும் இந்த கட்டிடமே காண்போரை வியப்பிற்குள்ளாக்கி வருகிறது. ஏழு மாடிகளைக் கொண்டிருக்கும் இந்த கட்டிடம் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதில் நீங்கள் ஓரமாகப் போய் ஒதுங்கிக் கொள்ள நினைத்தாலும் முடியாது. புரியவில்லையா..?? இந்த கட்டிடத்தில் மூலை என்ற ஒன்றே கிடையாது. அது மட்டுமா..?? தூண்களும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கின்றது இந்த அருங்காட்சியகம்.

 

வெளிப்புறத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வரிகளில் சில, இந்த கட்டிடம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதன் முறையாக கட்டிடமே ஒரு மொழியின் எழுத்துக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த கட்டிடத்தின் வெளிப்புறத்தில் மொத்தம் 1,024 பேனல்கள் உள்ளன. அது என்ன கணக்கு 1,024 என்று யோசிக்கிறீர்களா..?? பைனரி முறையில் 1 கிலோ பைட் என்பது 1,024 பைட் ஆகும். அதனை முன்வைத்து இது அமைக்கப்பட்டுள்ளது.

இது பார்வையாளர்களுக்கு தொழில்நுட்பம், விண்வெளி, இயற்கை மற்றும் ஆரோக்கியம் போன்ற துறைகளில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய ஊக்குவிக்கிறது.

78 மீட்டர் உயரம் கொண்ட இந்த அமைப்பு ஜூலை மாதம் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகையால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பூமியின் 14 மிக அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது.

 

அருங்காட்சிகத்தின் உள்கட்டமைப்பு

இந்த அருங்காட்சியகம் மொத்தம் ஏழு தளங்களைக் கொண்டுள்ளது. இதில் ஐந்து முக்கிய கண்காட்சி இடங்களாகும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையின் எதிர்காலத் தொகுப்பை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களை 2071 ஆம் ஆண்டுக்கான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது மற்றும் விண்வெளி வள மேம்பாடு, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உயிரியல் பொறியியல், உடல்நலம், ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகம் போன்ற துறைகளில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான காட்சிகளை உருவாக்குகிறது.

மூன்று தளங்கள் விண்வெளி வள மேம்பாடு, சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் உயிரியல் பொறியியல் மற்றும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

இதில் இருக்கும் லிஃப்ட் உங்களை ஒரு உண்மையான விண்கலத்திற்கு அழைத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. இதன் ஐந்தாவது தளத்தில் நாசா அங்கீகரித்த சர்வதே விண்வெளி மையத்தின் மாடல் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு நீங்கள் பூமியில் இருந்து 600 கிமீ தொலைவில் விண்வெளியில் இருப்பதைப் போன்றே உணர்வீர்கள். இந்த தளத்தில் சூரிய குடும்பம், சர்வதேச விண்வெளி மையம் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

விண்வெளியை மையமாகக் கொண்ட கண்காட்சிகளில் ஒன்று “புதிய நிலவு” என்று அழைக்கப்படுகிறது, மேலும் சந்திரனை எவ்வாறு முழு கிரகத்திற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்ற முடியும் என்பதைக் காட்டுகிறது.

மற்றொரு பகுதி “தி சென்டர்” என்று அழைக்கப்படுகிறது மற்றும் பார்வையாளர்கள் தங்கள் மின்காந்த புலங்களை மறுசீரமைக்கும் அதிர்வுகளில் மூழ்கி இயக்கம், தியானம் மற்றும் நீரின் மறுசீரமைப்பு விளைவுகளை அனுபவிக்க அனுமதிக்கிறது.

மேலும் அமேசான் மழைக்காடுகளின் கலவையான யதார்த்த பொழுதுபோக்கை இயற்கை கருப்பொருள் கண்காட்சி காட்டுகிறது. பார்வையாளர்கள் இங்கு 2,400 உயிரினங்களின் தொடர்புகளை ஆராயலாம் மற்றும் விவரங்களைக் காணலாம். அத்துடன் எதிர்காலத்தில் இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.

இரண்டாம் தளம்

இத்தளத்தில் பல வித்தியாசமான மற்றும் புதுவிதமான தொழில்நுட்பங்களை காணலாம். பறக்கும் ட்ரோன், ரோபோ நாய், தானியங்கி வாகனம் போன்றவை இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் தளம்

அருங்காட்சியகத்தின் முதல் தளம் “எதிர்கால ஹீரோக்கள்” என்ற குழந்தைகளைக் கவரும் நோக்கில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவியல், கணிதம் போன்றவற்றில் பல தகவல்களைப் பெறலாம்.

டிக்கெட்

அருங்காட்சியகத்திற்கு நுழைவதற்கு 145 திர்ஹம் செலவாகும். ஆனால் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குடிமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த டிக்கெட்டுகள் அருங்காட்சியகத்தின் www.motf.ae என்ற இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இலவச டிக்கெட்டிற்கு தகுதியுடையவர்கள் உட்பட அனைத்து பார்வையாளர்களும் அருங்காட்சியகத்திற்குள் நுழைவதற்கான நேரத்தை முன்பதிவு செய்ய வேண்டும்.

PCR பரிசோதனை தேவையா?

தற்போதைக்கு, பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழையோ அல்லது எதிர்மறையான PCR சோதனை முடிவையோ காட்ட வேண்டியதில்லை.

செயல்படும் நேரங்கள்

பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இது திறந்திருக்கும். கடைசி நுழைவு மூடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு வழங்கப்படுகிறது.

எப்படி செல்வது?

துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டருக்கு அருகில், ஜுமேரா எமிரேட்ஸ் டவர்ஸுக்கு அடுத்ததாக இந்த அருங்காட்சியகம் உள்ளது. துபாய் மெட்ரோ மூலம் வந்து சேர்வதற்கு இது எளிதான வழியாகும். ரெட் லைனில் உள்ள எமிரேட்ஸ் டவர்ஸ் ஸ்டேஷன் மிக அருகில் உள்ள ஸ்டேஷன் ஆகும். ஒரு பாலம் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து நேரடியாக அருங்காட்சியகத்துடன் இணைக்கிறது.

பொதுப் பேருந்து எண்கள் 27, 29 மற்றும் X22 ஆகியவையும் நேராக அருங்காட்சியகத்திற்குச் செல்கின்றன. டிக்கெட் வைத்திருந்து காரில் வருபவர்களுக்கு இலவச செல்ஃப் பார்க்கிங் வசதியும் உள்ளது. இருப்பினும் இது மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே. பார்க்கிங் இடங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. வாலட் பார்க்கிங் வசதியும் உள்ளது.

அருங்காட்சியகத்தின் பொதுவான விதிகள்

“special exhibition galleries”” என்று பெயரிடப்பட்டவை தவிர, பார்வையாளர்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கண்காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஃபிளாஷ் புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை.

ட்ரைபாட் மற்றும் செல்ஃபி ஸ்டிக்குகள் அனுமதிக்கப்படாது.

பார்வையாளர்கள் தங்கள் சொந்த உணவைக் கொண்டு வரலாம், அவை லாபி மற்றும் தோட்டப் பகுதிகளில் சாப்பிடலாம். வேறு எந்த கண்காட்சியிலும் உணவு அல்லது பானங்கள் அனுமதிக்கப்படவில்லை.

அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு தளத்திலும் பாத்ரூம் வசதி உள்ளது.

இலவச Wi-Fi வசதியும் உண்டு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!