UAE: அபுதாபி பயணிப்பவர்கள் இனி ரேபிட் PCR சோதனை எடுக்க தேவையில்லை..!! எதிஹாட் ஏர்வேஸ் தகவல்..!!
இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அபுதாபிக்கு பயணிக்கும் பயணிகள் இனி புறப்படும் விமான நிலையத்தில் ரேபிட் PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என அபுதாபியை தளமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
எதிஹாட் இணையதளத்தில், மேற்கூறிய நாடுகளின் நகரங்களில் இருந்து அபுதாபிக்கு பயணிப்பதற்கான பயண வழிகாட்டுதல்களில், விமானத்தில் இருந்து புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்குள் ரேபிட் PCR சோதனையின் அவசியத்தை குறிப்பிடவில்லை. அதே போல் எதிஹாட் நிறுவன ட்விட்டர் பக்கத்திலும் பயணிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது ரேபிட் சோதனை தேவையில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, துபாய், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவுக்குச் செல்லும் பயணிகளுக்கான ரேபிட் PCR சோதனைக்கான தேவை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அபுதாபியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இனி இந்தியா, இலங்கையில் இருந்து அமீரகத்தின் எந்த விமான நிலையத்திற்கும் பயணிக்க ரேபிட் PCR சோதனை தேவையில்லை என்பது தெளிவாகியுள்ளது.
எதிஹாட் இணையதளத்தில், இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு பயணிப்பதற்கு பின்வரும் தேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன:
>> அபுதாபி இறுதி இலக்காக இருந்தால், முதல் விமானம் புறப்படும் நேரத்திற்கு அதிகபட்சம் 48 மணிநேரத்திற்கு முன்னதாக அரசாங்க அங்கீகாரம் பெற்ற மையங்களில் PCR பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.
>> 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கடுமையான மற்றும் மிதமான மருத்துவ குறைபாடுகள் உள்ளவர்கள் அபுதாபிக்கு விமானத்தில் செல்ல PCR சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.