உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக பெயரெடுத்திருக்கும் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை முன்னிட்டு இந்த வார இறுதியில் மிக அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாள உள்ளது.
ஏப்ரல் 29 மற்றும் மே 9 க்கு இடையில் மட்டும் சுமார் 1.9 மில்லியன் பயணிகள் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாகச் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நாட்களில் சராசரி தினசரி போக்குவரத்து 177,000 பயணிகளுக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதில் மே 7 ம் தேதியானது மற்ற அனைத்து நாட்களை விட பரபரப்பான நாளாக இருக்கும் என்றும் அன்று 2 இலட்சத்திற்கும் அதிகமான பயணிகளை விமான நிலையம் எதிர்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நாட்களில் எப்போதும் போலவே, துபாய் விமான நிலையமானது விமான நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வணிக மற்றும் சேவை கூட்டாளர்களுடன் இணைந்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எளிதான மற்றும் வசதியான அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்யவிருப்பதால் இந்த காலத்தில் பயணம் செய்பவர்கள் சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் பயணத்தை சீராகவும் வசதியாகவும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
> பயணிகள் தாங்கள் பயணிக்கும் இடத்திற்கான சமீபத்திய பயண விதிமுறைகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, விமான நிலையத்தை அடைவதற்கு முன் தேவையான அனைத்து ஆவணங்களையும் செல்லுபடியாகும் தன்மையுடன் வைத்திருப்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
> 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறையை விரைவுபடுத்த ஸ்மார்ட் கேட்ஸைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
> டெர்மினல் 1ல் இருந்து விமானத்தில் பயணிப்பதாக இருந்தால், விமானம் புறப்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருதல் சிறந்தது. நேரத்தை மிச்சப்படுத்த ஆன்லைனில் செக்-இன் செய்து கொள்ளலாம்.
> டெர்மினல் 3 இலிருந்து பயணிப்பவர்கள் எமிரேட்ஸின் வசதியான ஏர்லி செக்-இன் மற்றும் செல்ஃப் சர்வீஸ் செக்-இன் வசதிகளைப் பயன்படுத்தலாம்.
> விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகள் இந்த நேரங்களில் மிகவும் பிஸியாக இருக்கும். இதனால் விமான நிலையத்திற்குச் செல்வதற்கும் அதன் வழியாகச் செல்வதற்கும் கூடுதல் நேரத்தைத் திட்டமிடுவது நல்லது.
> குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து வீட்டில் இருந்தே விடைபெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இந்த பிஸியான நேரங்களில் டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு மட்டுமே புறப்படும் பகுதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.
> விமான நிலையத்தை அடைந்த பின், பயணிகள் தங்களுடைய விமானம் புறப்படுவதற்கு முன் ஓய்வெடுப்பதற்காக உணவகங்கள், டூட்டி ஃப்ரீ ஷாப்பிங் மற்றும் ஓய்வறைகள் உட்பட DXB இன் முழு அளவிலான வசதிகளை அனுபவிக்க முடியும்.