சவூதி அரேபியா: வெளிநாட்டினர் அனுமதியின்றி மக்காவிற்குள் நுழைய தடை..!! காரணம் இதுதான்..!!
சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டவர்கள் வியாழக்கிழமை (நேற்று) முதல் அனுமதியின்றி புனித நகரமான மெக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக சவூதி அரசு அறிவித்துள்ளது. இந்த தடையானது இந்த வருட ஹஜ் சீசன் முடியும் வரை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
உம்ரா மற்றும் ஹஜ் அனுமதிகளை வைத்திருப்பவர்கள் மற்றும் மக்காவில் பணிபுரிய நுழைவு அனுமதி பெற்றவர்கள் மற்றும் மக்காவிலிருந்து வழங்கப்பட்ட இகாமா வைத்திருக்கும் வெளிநாட்டினர் போன்றவர்களுக்கு மட்டுமே இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்காவிற்குள் நுழையும் இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படும் இந்த தடை, கார்கள், பேருந்துகள் மற்றும் லாரிகள் உட்பட அனைத்து போக்குவரத்து முறைகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தடையில் இருந்து விலக்கு பெற்றவர்கள் தகுதிவாய்ந்த அதிகாரிகளிடமிருந்து பயண அனுமதியைப் பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹஜ் எனும் புனித யாத்திரையை ஒழுங்குபடுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவூதியின் பொது பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சமி முகமது அல் ஷுவைரேக் தெரிவித்துள்ளார்.