ஓமானில் எவருக்கும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை..!! அறிவிப்பை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்..!!
உலகின் பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயின் சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் எதுவும் ஓமானில் கண்டறியப்படவில்லை என்று ஓமான் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொற்றுநோய் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் நோயுற்ற சுவாச அறிகுறிகளைக் காட்டும் எந்தவொரு நபருடனும், குறிப்பாக குரங்கு அம்மை நோய் பாதித்த நாடுகளில் இருந்து வரும் நபர்களுடன் நேரடி தொடர்புக்கு எதிராக அமைச்சகம் எச்சரித்துள்ளது.
சமூகத்தில் சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் கண்டறியப்பட்டவுடன், முக கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் கை சுகாதாரத்தை பராமரிப்பதன் அவசியத்தையும் அமைச்சகம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. மேலும் உத்தியோகபூர்வ ஆதாரங்களில் இருந்து தகவல் மற்றும் புதுப்பிப்புகளைப் பெறவும், வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பின்பற்றுவதைத் தவிர்க்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் குரங்கு அம்மை நோயின் முதல் தொற்று பதிவு செய்யயப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமீரகத்திற்கு வந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தற்பொழுது அவர் தனிமைப்படுத்தப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.