மருத்துவ பரிந்துரை இல்லாமல் மருந்துகள் எடுத்து வர அனுமதி இல்லை..!! பயணிகளை அறிவுறுத்தும் ஓமான்..!!
ஓமான் பயணிக்கும் பயணிகளில் மருத்துவ பரிந்துரை இல்லாமல் பயணிகள் மருந்துகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஓமான் விமான நிலையக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஓமன் விமான நிலையக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பயணிகள் மருந்துச் சீட்டு (prescription) இல்லாமல் பல்வேறு மருத்துவ மாத்திரைகளை எடுத்துச் செல்வதை நாங்கள் கவனித்துள்ளோம். இதனால் பயணிகளுக்கு பயணத்தில் தாமதம் ஏற்படுவதோடு அந்த மருந்துகளை ராயல் ஓமன் காவல்துறை கைப்பற்றுவதற்கான வாய்ப்பும் நிறைய உள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில் “எனவே, ஓமானில் இருக்கும் எந்த விமான நிலையத்திற்கும் விமானத்தில் வரும் பயணிகள் தங்களது எளிதான பயணத்தை உறுதி செய்வதற்காக எடுத்து வரப்படும் அனைத்து மருந்துகளுடன் மருத்துவ பரிந்துரைகளையும் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே அனைத்து பயணிகளும் மருத்துகள் எடுத்துச் செல்லும் போது இதனை கொண்டு செல்வது வழக்கமானதுதான் என்றாலும் இன்னும் பலர் மருந்துகளை கொண்டு செல்லும்போது மருந்து சீட்டு (prescription) இல்லாமல் அதிகாரிகளிடம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே இனிமேலும் மருந்துகள் எடுத்துச் செல்லும் போது கவனத்துடன் மருந்து சீட்டையும் சேர்த்து வைத்துக் கொண்டு பயணத்தை எவ்வித தடையுமின்றி எளிதாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.