UAE: ஒருமுறை அல்ல.. அடுத்தடுத்து ஏற்பட்ட வெடிப்பு.. பயங்கர தீ.. அபுதாபி கேஸ் வெடிப்பை பார்த்த நபர்கள் பகிர்ந்த விஷயங்கள்..!!
அபுதாபியில் உள்ள கலிதியா பகுதியில் இருக்கும் ஒரு உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் இரண்டு பேர் உயிரிழந்தத்தாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவைம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கலிதியா மால் அருகே உள்ள பிரபலமான உணவகத்தில் மதிய உணவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்ததை அறிந்த சிவில் பாதுகாப்பு படையினர் உடனடியாக வந்து செயல்பட்டு கேஸ் வெடிப்பால் ஏற்பட்ட மாபெரும் தீயை அணைத்தனர். அத்துடன் அந்த உணவகத்திற்கு அருகில் உள்ள பல வீதிகள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், காவல்துறை ரோந்துப் பணியிலும் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், குடியிருப்பாளர்கள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் ஒன்றுக்கு மேற்பட்ட வெடிப்புகள் 12.45 முதல் 1 மணிக்குள் நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து 10 முதல் 20 நிமிட இடைவெளியில் மற்றொரு வெடிப்பு நிகழ்ந்ததாகவும், இது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு கடைக்காரர் கூறுகையில், “நான் எனது லாண்ட்ரி கடையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அடுத்த தெருவில் ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது. மதியம் 1 மணிக்கு முன்புதான் இருந்தது. நான் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, பெரும் தீப்பிழம்புகளை கண்டேன். உடனடியாக சிவில் பாதுகாப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில், அருகில் உள்ள கட்டிடங்கள் வெளியேற்றப்பட்டன. 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு கேஸ் வெடிப்பு ஏற்பட்டது. அது மதிய உணவு நேரம், மேலும் இந்த உணவகம் குடியிருப்பாளர்களால், குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்களால் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது” என்று ஒரு தெரிவித்துள்ளார்.
அதே தெருவில் வசிக்கும் ஒரு குடியிருப்பாளர், இரண்டாவது முறையாக ஏற்பட்ட வெடிப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில் “காவல்துறையும் சிவில் பாதுகாப்பும் சம்பவ இடத்திற்கு விரைந்தன; ஆம்புலன்ஸ்களும் இருந்தன. சில நிமிடங்களில், இரண்டாவது குண்டு வெடித்தது, பலர் காயமடைந்தனர். முதல் வெடிப்புக்குப் பிறகு பலர் கூடிவிட்டதால் 75 முதல் 100 பேர் காயமடைந்தனர் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.
மற்றொரு குடியிருப்பாளர் கூறுகையில், “முதல் வெடிப்பிற்கு பிறகு, சத்தம் கேட்டு வெளியே வந்த ஒரு கணிசமான கூட்டம் தெருவில் இருந்தது. இது ஒரு கட்டிடத்தின் கீழ் தளத்தில் இயங்கும் கேரள உணவகம். இது சுவையான உணவுக்கு பெயர் பெற்றது. முதல் வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து பலத்த சத்தம் கேட்டு ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “அடுத்த தெருவில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கடைகளில் ஜன்னல்கள் உடைந்துள்ளன. இது ஒரு பெரிய தீ விபத்து. எனது கடந்த 10 வருடங்களில் இதுபோன்ற எதையும் நான் இங்கு பார்த்ததில்லை. பல ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல விரைந்தன” என அவர் கூறியுள்ளார்.
அருகில் உள்ள தெருக்களில் வசிக்கும் சிலர் தங்கள் கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பிற்பகல் 2.15 மணியளவில், கலிதியா பகுதியில் போக்குவரத்துத் தடையால் பேருந்துப் பயணம் தாமதமாகும் என்று பள்ளிகள் பெற்றோருக்கு SMS அனுப்பியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.