இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயணம் செய்ய குடிமக்களுக்கு தடை விதித்த சவூதி அரேபியா..!!
புதிய வகை கொரோனா வைரஸானது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து சவுதி அரேபியா தனது குடிமக்கள் 16 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என கூறி தடை விதித்துள்ளது. அந்த நாடுகளில் இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்கும்.
கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரசு கூறியுள்ளது. இதற்கிடையில், சவூதி அரேபியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
தடுப்பு சுகாதாரத்திற்கான சுகாதார துணை மந்திரி டாக்டர் அப்துல்லா ஆசிரி கூறுகையில், “குரங்கு அம்மை நோய்” தொடர்பான சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்காணிக்கவும் கண்டறியவும் மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் நாட்டின் சுகாதாரத் துறையானது திறன் கொண்டது என்று கூறியுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்: “சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு ஒரு நிலையான வரையறை உள்ளது மற்றும் அவற்றை உறுதிப்படுத்துவதற்கான வழி மற்றும் கண்காணிப்பு மற்றும் நோயறிதல் முறைகள் நாட்டின் ஆய்வகங்களில் உள்ளன.” என தெரிவித்துள்ளார்.
“இப்போது வரை, மனிதர்களிடையே பரவும் தன்மை மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே இந்த நோயில் இருந்து ஏதேனும் பரவல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள், பாதிப்புகளைக் கண்டறிந்த நாடுகளில் கூட, மிகக் குறைவு” என்று அவர் மேலும் கூறியுள்ளார். 11 நாடுகளில் சுமார் 100 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.