2,500 திர்ஹம்ஸ் சம்பளம் வாங்கிய மதுரைக்காரருக்கு அடித்த 5 இலட்சம் திர்ஹம்ஸ் ஜாக்பாட்..!!
அபுதாபியில் நடந்து வரும் பிக் டிக்கெட்டின் வாராந்திர ரேஃபிள் டிராவில் இந்த வாரம் தமிழகத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி மீனாட்சிசுந்தரம் எனும் 29 வயதான நபர் 5 இலட்சம் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
தனது மகனின் பிறந்த தேதியுடன் பொருந்திய எண்களைக் கொண்ட டிக்கெட்டை வாங்கிய மதுரையைச் சேர்ந்த தட்சிணாமூர்த்திக்கு இந்த ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
மதுரையை சொந்த ஊராக கொண்டு தற்பொழுது துபாயில் வசிக்கும் இவர் வெற்றி பெற்றது பற்றி கூறுகையில், “நான் கடந்த ஒன்பது வருடங்களாக ஐக்கிய அரபு அரமீ்கத்தில் வசித்து வருகிறேன். ஒரு நாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த ஐந்து வருடங்களாக பிக் டிக்கெட்டை வாங்கி வருகிறேன். இறுதியாக, நான் வென்றிருக்கிறேன். நான் வழக்கமாக எனது நண்பர்கள் மற்றும் சகோதரரின் பங்களிப்புடன் ஒரு டிக்கெட்டை வாங்குவேன். இருப்பினும், இந்த முறை நான் தனியாக டிக்கெட்டை வாங்கினேன், ”என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் விடுமுறை முடிந்து திரும்பி வந்த இவர் மே 2 அன்று தனது டிக்கெட் எண்ணான 065245 ஐ கொண்ட டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
“என் மகனுக்கு மே 24 அன்று ஒரு வயதாகிறது. அவன் பிறந்த தேதி 24-5-2021. எனவே, ஒரு குறிப்பிட்ட டிக்கெட்டில் கடைசி மூன்று இலக்கங்களாக 24 மற்றும் 5 இருந்தன, அதை நான் தேர்ந்தெடுத்தேன். எனது மகனின் பிறந்தநாளுடன் பொருந்திய எண்கள் காரணமாக இந்த முறை நான் அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்தேன். அதனால், அந்த டிக்கெட்டை நான் தனியாக வாங்கினேன், நான் வெற்றி பெற்றேன், ” என்று கூறியுள்ளார்.
கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து 2,500 திர்ஹம் சம்பாதிக்கும் இவர் தொடர்ந்து கூறுகையில் “நான் இப்போது என் மனைவியையும் மகனையும் அமீரகத்திற்கு அழைத்து வரவிருக்கிறேன். இருந்தபோதிலும் நான் தற்பொழுது பணிபுரியும் நிறுவனத்திலேயே தொடர்ந்து வேலை செய்வேன்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
வரும் ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் மாபெரும் குலுக்கல்லில் முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹம், இரண்டாம் பரிசு 1 மில்லியன் திர்ஹம் மற்றும் இரண்டு பரிசுகளை வெல்லும் வாய்ப்பு அவருக்கு இன்னும் உள்ளது குறிப்பிடத்தக்கது.