அமீரகத்தில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்.. 18 நாட்கள் தீவிர சிகிச்சைக்குபின் உயிர் பிழைத்தார்..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய இந்தியர் 18 நாள் தொடர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான லால்டேலு ராம் ஹர்கேஷ், அமீரகம் தலைநகர் அபுதாபியில் ஃபோர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இருப்பினும் சிகிச்சை எதுவும் பெறாமல் தவிர்த்துள்ளார்.
பின்னர் சில நாட்களில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவர்களை அணுகிய போது சந்தேகத்தின் அடிப்படையில் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் முடிவில் டி.டி.பி என்றழக்ககூடிய த்ராம்போடிக் த்ராம்போசைடோபீனியா பர்புரா என்ற அரியவகை நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
டி.டி.பி நோய் என்பது ரத்தத்தில் ஏற்படும் அரியவகை நோய். 10 லட்சம் பேரில் 46 பேர் இந்த அரியவகை நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மூளை, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
இதனை அடுத்து அமீரகத்தில் உள்ள லைப்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஹர்கேஷ் அனுமதிக்கப்பட்டார். 12 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவினர் அவருக்கு 18 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் ஹர்கேஷ் குணமடைந்தார்.