அமீரகத்தின் மிகப்பெரிய “துபாய் சஃபாரி பார்க்” தற்காலிகமாக மூடல்.. துபாய் முனிசிபாலிட்டி அறிவிப்பு..!!
அமீரகத்தின் மிகப்பெரிய விலங்குகள் சரணாலயமான ‘துபாய் சஃபாரி பார்க்’ கோடை காலத்தை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்படும் என துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. இது குறித்து துபாய் முனிசிபாலிட்டி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்வீட்டில் “துபாய் சஃபாரி பூங்காவில் ஒரு அழகான சீசன் இருந்தது. இருப்பினும், எங்கள் குறுகிய கோடை விடுமுறைக்கான நேரம் இது. செப்டம்பரில் உங்களை மீண்டும் வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று துபாய் முனிசிபாலிட்டி கூறியுள்ளது.
2021-22 ம் ஆண்டின் சீசனுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி துபாய் சஃபாரி பூங்கா பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் வரக்கூடிய 2022-23 ம் ஆண்டு சீசனுக்காக திறக்கப்படும் தேதியை துபாய் முனிசிபாலிட்டி பின்னர் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சரணாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய விலங்குகளில் அணில் குரங்கு, மோனா குரங்கு, அரேபிய ஓநாய் ஆகியவையும் அடங்கும்.
அமீரகத்திலேயே மிகப்பெரிய அளவிலான 119 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்த துபாய் சஃபாரி பூங்காவில் 78 வகையான பாலூட்டிகள், 50 வகையான ஊர்வன, 111 வகையான பறவைகள் உள்ளிட்ட சுமார் 3,000 விலங்குகள் உள்ளன.
மேலும் பார்வையாளர்கள் விலங்குகளுடன் நெருங்கி பழகவும், விலங்குகளுக்கு அருகே சென்று பார்க்கவும், அவற்றின் வாழ்விடங்கள் மற்றும் அவற்றைப் பராமரிக்கும் முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் வசதியாக அமீரகத்தில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட சஃபாரி பூங்கா என்பது இதன் சிறப்பம்சமாகும்.