அமீரகத்தில் இன்று மீண்டும் உணரப்பட்ட நிலநடுக்கம்.. 5.7 ரிக்டர் பதிவாகியதாக நில அதிர்வு மையம் தகவல்..!!
கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் அதிர்வுகள் அமீரகத்திலும் உணரப்பட்ட நிலையில், தற்போது உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.37 மணியளவில் மீண்டும் ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
ஈரானில் இன்று சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறிஉல்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையமானது தெற்கு ஈரான் பகுதியில் இருந்ததாகவும், பூமியின் மேற்பரப்பில் இருந்து 8 கிலோமீட்டர் (4.97 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
ஈரானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை தாங்களும் உணர்ந்ததாக ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். குறிப்பாக துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் காலையில் நில அதிர்வை உணர்ந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இதே போன்று நேற்று ஆஃப்கானிஸ்தானிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.