Covid19: இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை நீக்கிய சவூதி அரேபியா..!!
கடந்த சில நாட்களுக்கு முன் சவூதி அரேபிய அரசானது குறிப்பிட்ட 16 நாடுகளில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பால் அந்நாடுகளுக்கு குடிமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என கூறி பயணத்தடையை அறிவித்திருந்தது. இதில் இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லிபியா, இந்தோனேஷியா, வியட்நாம், ஆர்மீனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அடங்கும்.
இந்த நிலையில் சவூதியில் கொரோனா தொடர்பான மீட்சியில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் மாத தொடக்கத்தில், முக கவசம் அணிய வேண்டிய தேவையில்லை போன்ற வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட பல நடவடிக்கைகளை அரசு நீக்கியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்பொழுது
சவூதி அரேபியா இந்தியா, துருக்கி, எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் தனது குடிமக்கள் மீதான பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியதாக சவூதியின் அரசு செய்தி நிறுவனம் SPA தெரிவித்துள்ளது. இதன் மூலம் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் என அனைவருக்கும் இந்தியா, சவூதி இடையே பயணம் செய்ய தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.