அமீரகத்தில் கனமழை: 24 மணி நேர சிறப்பு சேவையை அறிவித்து மக்களை மகிழ்வித்த உணவு நிறுவனம்..!
ஐக்கிய அரபு அமீரகத்தின் கிழக்குப் பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க அரசாங்கம் பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மழை மற்றும் வெள்ள பாதிப்பால் மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தங்கும் விடுதிகளின் கட்டணத்தை அதிகப்படுத்தி அவர்களுக்கு சிரமங்களை அதிகரிக்கக்கூடாது என ஃபுஜைராவில் உள்ள விடுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழை காலத்தில், வாடிக்கையாளர்களுக்கு 24 மணி நேர உணவு டெலிவரி சேவைகள் அளிக்கப்படும் என்று ஷார்ஜா கோ-ஆப் கூறியுள்ளது. அமீரகத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள கிளைகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக இப்போது 24 மணிநேரமும் திறந்திருக்கும்,” என்று நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் தங்களுக்கு தேவையான உதவியை செய்வதற்காக பலர் நிறுவனத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்வதால், சில சாலைகள், சுற்றுலா தலங்கள் மற்றும் சில பகுதிகளை பாதுகாப்பு நடவடிக்கையாக மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலையற்ற வானிலை காரணமாக கோர்ஃபக்கனில் உள்ள ஷீஸ் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.
நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அவசியமின்றி செல்ல வேண்டாம் என ஷார்ஜா காவல்துறை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், அடைமழை மற்றும் திடீர் வெள்ளம் நிற்கும் வரை தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.