துபாய்: புர்ஜ் கலீஃபாவைச் சுற்றி 500 மீட்டர் உயரத்தில் ராட்சஷ வளையம்..?? துபாயின் அடுத்த பிரம்மாண்டம்..!!
துபாயை தளமாகக் கொண்ட கட்டிடக்கலை நிறுவனத்தின் இணை நிறுவனர்கள், துபாய் நகருக்கான புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். துபாயின் முக்கிய பகுதியான உலகின் உயரமான கட்டிடம் அமைந்துள்ள டவுன்டவுன் துபாயில் இந்த வியப்பூட்டும் வடிவமைப்பதற்கான திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த டவுன்டவுனில் இருக்கும் புர்ஜ் கலீஃபா மற்றும் அதன் இதர சுற்றுப்புற பகுதிகளை சுற்றி 500-மீட்டர் உயரமான வளையத்தில் டவுன்டவுன் சர்கிள் (Downtown circle) எனப்படும் வளையத்தை உருவாக்கலாம் என கட்டிடக்கலை நிறுவனத்தின் இணைநிறுவனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வளையம் மூன்று கிலோமீட்டர்சுற்றளவு கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் நஜ்முஸ் சௌத்ரி மற்றும் நில்ஸ் ரெம்ஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக இருப்பின் அதிக காலம், நிறைய மனித உழைப்பு, மற்றும் மேலதிக திட்டங்கள் தேவைப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வளையமானது ஐந்து செங்குத்து பீம்களின் உதவியுடன் நிறுத்தப்படும் என்றும் இந்த வளையத்தில் ஸ்கைபார்க் என்று பெயரிடப்பட்டும் முக்கிய பகுதி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் “இதில் பல்வேறு இயற்கை காட்சிகள் மற்றும் தட்பவெப்பநிலைகள் மீண்டும் உருவாக்கப்பட்டு, பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு ஒரு உயிரோட்டமான பயணத்தை அனுபவிக்க வழிவகுக்கும்” என்று Znera Space தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன் “பல்வேறு தாவரங்கள், மணல் குன்றுகள் மற்றும் சதுப்பு நிலங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் வெப்பமண்டல தாவரங்கள், டிஜிட்டல் குகைகள், அருவிகள், பழ மரங்கள் மற்றும் பல்வேறு வண்ணங்கள் மற்றும் இனங்களின் மலர்கள் ஆகியவை பசுமையான சுற்றுச்சூழல் அமைப்பை வளப்படுத்தும்” என்றும் அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டவுன்டவுன் சர்க்கிளான இந்த வடிவமைப்பு முதலில் துபாய் ஃபியூச்சர் ஃபவுண்டேஷனால் தொடங்கப்பட்ட வடிவமைப்பு போட்டியில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தெரிவிக்கையில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் வடிவமைப்பைச் சமர்ப்பித்தோம், எங்கள் வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், நாங்கள் அவர்களிடம் இருந்து மீண்டும் சிறிது நேரம் கேட்டுவிளக்கப்படங்களை வெளியிட முடிவு செய்தோம்” என்று இதனை வடிவமைத்த கலைஞர் நஜ்முஸ் சௌத்ரி விளக்கியுள்ளார்.
இதன்மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு கட்டிடம் திறக்கபட்டால் அது உலகமே வியக்கும் வண்ணம் கட்டிடக்கலையில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் இந்த திட்டம் உண்மையில் செயல்படுத்தப்படுமா..?? அப்படி செயல்படுத்தப்பட்டால் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.