UAE: வாட்ஸ் அப்பில் சக ஊழியரை அவமதித்ததற்காக 10,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..!
வாட்ஸ்அப் மூலம் தனது சக ஊழியரை அவமதிக்கும் வகையில் மெசேஜ் அனுப்பிய இளைஞருக்கு 10,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைன் சட்டத்தை மீறி தனது சக ஊழியரை அவமதித்து மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, அரபு நாட்டை சேர்ந்த நபர் இழப்பீட்டுத் தொகையை பெண்ணுக்கு வழங்குமாறு அல் ஐன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக அல் ஐன் நீதிமன்றத்தில், அந்த பெண் தனது பணியிடத்தில் உள்ள அரேபியருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து, வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட வாய்ஸ் மெசேஜ்ஜில் அவமதித்ததற்காகவும், துஷ்பிரயோகம் செய்யபோவதாக மிரட்டியதற்காகவும் 50,000 திர்ஹம்ஸ் வழங்க வேண்டும் என்று கோரினார். இத்தகைய புண்படுத்தும் செய்திகள் தன்னை சிறுமைப்படுத்தியதாகவும், தான் உளவியல் ரீதியாக பாதித்ததாகவும் அப்பெண் கூறினார். மேலும் அவர் மெசேஜ் ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இரு தரப்பினர் விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, அந்த பெண்ணுக்கு 10,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்குமாறு அரேபியருக்கு உத்தரவிட்டார். மேலும் அந்த பெண்ணின் சட்டச் செலவுகளை அவரே செலுத்துமாறும் கூறப்பட்டது.