UAE: துபாயில் உள்ள தமிழர்களுக்கு குட் நியூஸ்.. விமான சேவைகளை அதிகரிக்க முயற்சி..!
தமிழகத்தின் குறிப்பிட்ட சில விமான நிலையங்களில் விமான சேவைக்கு அனுமதி கோரி துபாய் விமான போக்குவரத்து ஆணைய இயக்குனர் அமைச்சர் சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி துபாயில் இருந்து திருச்சி, கோயம்புத்தூர், கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க கோரி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். துபாயில் இருந்து இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் உள்பட 9 நகரங்களுக்கு விமான சேவை இருந்து வருகிறது.
திருச்சி, கோவை, கண்ணூர், கோவா ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க துபாய் தீவிரம் காட்டியுள்ளது. துபாயில் இருந்து இந்தியாவுக்கு வாரத்துக்கு 183 விமான சேவை இருந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி தற்போது 65,200 விமான இருக்கைகள் உள்ளன என்ற கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருநாட்டு விமான போக்குவரத்து ஆணைய பிரதிநிதிகள் சந்தித்து பேச உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனக் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.