UAE: துபாய் ஓபன் செஸ் போட்டியில் வெற்றி நோக்கி நகரும் இந்திய வீரர்கள்..!
22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் 78 இந்திய வீரர்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி போன்ற பிரபல இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். துபை ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 23 வீரர்களுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.
முன்னதாக அபுதாபியில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் செஸ் தொடர் போட்டியில் 148 வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் அர்ஜூன் எரிகைசி, ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டரான டேவிட் அன்டன் குய்ஜாரோவை எதிர்கொண்டார். இதில் அர்ஜூன் எரிகைசி 67-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.