அமீரக செய்திகள்

அமீரகத்தின் முதல் மின்சார சரக்கு விமான உரிமத்திற்கு ஒப்புதல்..!

ஐக்கிய அரபு அமீரகத்தில் முழு மின்சார சரக்கு விமானத்திற்கான தற்காலிக உரிமத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த விமானம் முற்றிலும் சுத்தமான ஆற்றலில் இயங்குவதோடு பூஜ்ஜிய உமிழ்வைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமீரக துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அதன் பிறாகு ஷேக் முகமது ட்விட்டர் பதிவில், இந்த நடவடிக்கை “கப்பல் துறையின் எதிர்காலத்தையும் அதன் சுற்றுச்சூழல் தாக்கங்களையும் மாற்றுவதற்கு பங்களிக்கக்கூடிய ஒரு முக்கிய நடவடிக்கை” என்று பதிவிட்டுள்ளார்.

உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்த வளர்ந்து வரும் கவலைகள் காரணமாக, அமீரகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள்  பூஜ்ஜிய உமிழ்வை அடைய நிலையான சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து முறைகளை நோக்கி அதிகளவில் நகர்கின்றன.

மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் மற்றும் ஆற்றல் திறன் கொண்ட விமானங்களை நோக்கி விமானப் போக்குவரத்துத் துறையும் முன்னேறி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய விமான உற்பத்தியாளர்கள் முழு மின்சார விமானமான (eVTOL) விமானங்களை உருவாக்கி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், DHL எக்ஸ்பிரஸ், அமெரிக்காவை தளமாகக் கொண்ட எலக்ட்ரிக் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 12 எலக்ட்ரிக் ஆலிஸ் eCargo விமானங்களை ஆர்டர் செய்தது. ஒற்றை பைலட் ஆலிஸ் eCargo விமானம் 815 கி.மீ. மற்றும் 1,250 கிலோ எடையில் பறக்க முடியும். கூடுதலாக, 2024 ஆம் ஆண்டில் வழங்கப்படும் பீட்டா டெக்னாலஜிஸில் இருந்து 2021 ஆம் ஆண்டில் 150 மின்சார சரக்கு விமானங்களை வாங்கும் திட்டத்தையும் UPS அறிவித்தது.

அமீரகம் நிர்ணயித்த 2050 நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய அமீரக விமான நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றது, சமீபத்தில், அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எடிஹாட் ஏர்வேஸ் முழுத் தொழில்துறைக்குமான விமான நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான தொழில்துறை முன்னணி மூலோபாயத்திற்காக வருடாந்திர ஏர்லைன்ஸ்கான விருதுகளில் ‘2022 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் விமான நிறுவனம்’ என்று பெயர் பெற்றது.

Related Articles

Back to top button
error: Content is protected !!