கொரோனாவிற்கான தனிமைப்படுத்தல் விதிகளை தளர்த்திய அமீரக அரசு..!! புதிய விதிகள் என்ன..??
ஐக்கிய அரபு அமீரகமானது கொரோனா தொடர்பான விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்து புதிய வழிகாட்டுதல்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றாக கொரோனா பாதித்த நபர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளை ஐக்கிய அரபு அமீரகம் தளர்த்தியுள்ளது.
சமீபத்திய விதிகளின்படி, வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் கொரோனாவிற்கான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே PCR பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட எளிதில் நோய்த்தொற்று பாதிக்கப்படக்கூடிய வகைகளைச் சேர்ந்த நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு PCR சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 28 புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பெரும்பாலான பொது இடங்கள் மற்றும் மத்திய அரசு துறை அலுவலகங்களில் நுழைவதற்கு Al Hosn செயலியில் கிரீன் பாஸ் நடைமுறையில் உள்ளது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதன் செல்லுபடியாகும் காலம் தற்பொழுது நீட்டிக்கப்பட்டு ஒரு மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி, கிரீன் பாஸைத் தக்கவைக்க குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் PCR சோதனை முடிவை எதிர்மறையாகப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையின் விளைவாக அமீரகத்தில் கொரோனா விதிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.