துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து..!!
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் நேற்று (திங்கள்கிழமை) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மாலில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து துபாய் சிவில் பாதுகாப்புக் குழுவின் செயல்பாட்டு அறைக்கு இரவு 7.28 மணிக்கு எச்சரிக்கப்பட்டது என்றும் ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மாலின் முகப்பின் ஒரு பக்கத்திலிருந்து தீ கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டறிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாலில் உள்ள அனைவரையும் வெளியேற்றிய பிறகு, சிவில் பாதுகாப்புக் குழுவானது தீயணைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது எனவும் இரவு 7.42 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் இரவு 8.09 மணி வரை குளிரூட்டும் பணிகள் தொடர்ந்தன என தகவல் கூறப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று துபாயில் நேற்று அல் கூஸ் தொழில்துறை பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றிலும் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததும் குறிப்பிடத்தக்கது.