UAE: மாதம் 2,500 திர்ஹம்ஸ் சம்பளம் வாங்கும் இந்தியர்களுக்கு அடித்த 25 மில்லியன் திர்ஹம்ஸ் ஜாக்பாட்..!!
அபுதாபியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் துபாயில் இருந்து 20 இந்தியர்கள் அடங்கிய குழு 25 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் 10 வருடங்களுக்கும் மேலாக துபாயில் வசித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகத் துறையில் பணிபுரிவதால் மாதச் சம்பளம் 2,500 திர்ஹம் முதல் 3,000 திர்ஹம் வரை சம்பளம் பெறுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து டிக்கெட் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிக் டிக்கெட்டின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிச்சர்ட் வெற்றி பெற்ற டிக்கெட்டை வாங்கிய சஜேஷ் என்.எஸ் என்பவருக்கு போன் செய்தபோது, இது அந்த குழுவில் இருந்து யாரோ ஒருவர் போன் செய்து ஏமாற்றுகிறார் என நினைத்ததாக சஜேஷ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் “ஆனால் அதே எண்ணிலிருந்து பல அழைப்புகள் வந்ததின் காரணமாக ஆன்லைனில் சரிபார்த்தோம். அதில் வெற்றி பெற்ற எண் எங்களுடையது என்பதைக் கண்டறிந்தோம்”என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஜாக்பாட் வென்ற நிகழ்வை தங்கள் வாழ்வில் மறக்க முடியாது எனவும் அவர்கள் அனைவரும் தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறினாலும், அவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை தங்களது வேலைக்கு மீண்டும் திரும்பியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
வியாழன் மாலை நடைபெற்ற இந்த நேரடி நிகழ்வானது 2020 ஆம் ஆண்டில் கொரோனா பாதிக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட பிக் டிக்கெட்டின் முதல் வெளிப்புறத்தில் நடத்தப்பட்ட ரேஃபிள் டிரா ஆகும். இதனையடுத்து டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் அடுத்த டிராவில் வெற்றி பெறுபவர்களுக்கு 30 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகை வழங்கவிருப்பதாக பிக் டிக்கெட் குழு தெரிவித்துள்ளது.
இதில் இரண்டாவது பரிசாக 1 மில்லியன் திர்ஹமும், மூன்றாம் பரிசாக 100,000 திர்ஹமும் மற்றும் நான்காம் பரிசாக 50,000 திர்ஹமும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பிக் டிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, இந்த மாதத்திற்கான ஒவ்வொரு வாராந்திர மின்னணு-டிரா வெற்றியாளரும் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.