அமீரக தேசிய தின கொண்டாட்டம்: லாரிகள், தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் பேருந்துகள் நுழைய தடை..!! அபுதாபி காவல்துறை அறிவிப்பு..!!
அமீரகத்தின் 51 வது தேசிய தினம் மற்றும் நினைவு தின கொண்டாட்டத்தின் போது அபுதாபி ஐலேண்டிற்குள் லாரிகள், கனரக வாகனங்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி ஷேக் சயீத் பிரிட்ஜ், ஷேக் கலீஃபா பிரிட்ஜ், முசாஃபா பிரிட்ஜ் மற்றும் அல் மக்தா பிரிட்ஜ் உட்பட அனைத்து நுழைவாயில்களுக்கும் இந்த இயக்கத் தடை பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து தடையானது நவம்பர் 30 புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி வரை நீடிக்கும் என்று போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகத்தின் இயக்குனர் பிரிகேடியர் முகமது தாஹி அல் ஹமிரி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொது துப்புரவு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறை சம்பந்தமான வாகனங்களுக்கு இந்த போக்குவரத்து தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து ரோந்து பணியை ஈடுபடுத்தும் வகையில் விரிவான போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்வதற்காக ஸ்மார்ட் அமைப்புகள் மூலம் விரிவான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து இந்த நாட்களில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.