இந்தியர்களுக்காக சவூதி அரசு எடுத்த முடிவு..!! தூதரகம் வெளியிட்ட அறிக்கை..!!
சவூதியில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் அதிக எண்ணிக்கை கொண்டவர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர். பல தசாப்தங்களாகவே அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் சவூதியில் சென்று பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சவூதி விசா விண்ணப்பிக்க காவல்துறை அனுமதி சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவது கட்டாயமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது சவூதி விசாவிற்கு விண்ணப்பிக்க இந்தியர்கள் இனி காவல்துறை அனுமதிச் சான்றிதழைத் தர வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சவுதி தூதரகம் இது குறித்து வெளியிட்டுள்ள ஒரு சமூக ஊடக பதிவில் “சவூதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களுக்கான காவல்துறை அனுமதிச் சான்றிதழுக்கு விலக்கு அளிக்க சவூதி முடிவு செய்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
விசாவிற்கான காவல்துறை அனுமதியை நீக்குவதற்கான சவூதியின் நடவடிக்கை மூலம் விசாவிற்கான விரைவான விண்ணப்ப செயலாக்கம் நடைபெறும் மற்றும் விசா பெறுவதற்கான ஆவணங்களில் ஒரு ஆவணம் குறையும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் “சவூதியில் அமைதியாக வாழும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான இந்திய குடிமக்களின் பங்களிப்பை தூதரகம் பாராட்டுகிறது” என்றும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.