இந்தியாவில் இருந்து துபாய் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு..!! பயணிகள் அதிர்ச்சி..!!
இந்தியாவில் இருந்து துபாய் வந்த விமானத்தில் பயணிகளுடன் சேர்ந்து பாம்பு ஒன்றும் பயணித்த சம்பவமானது விமான பயணிகளிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் இருந்து துபாய் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
போயிங் B-737 என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திட்டமிட்டபடி புறப்பட்டு துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, விமானத்தில் பாம்பு இருப்பதாக ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “கோழிக்கோட்டில் இருந்து துபாய் வந்தடைந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சரக்கு பகுதியில் ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது,” என்று கூறியிருந்தார்.
மேலும் இது பற்றி கூறுகையில் “பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் மற்றும் விமான நிலைய தீயணைப்பு சேவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடுத்த கட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன” என மற்றொரு அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாகவும் பின் விமானத்தில் இருந்து பாம்பினை வெளியேற்றுவதற்கான முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளது.