UAE: உலகின் முதல் 3D மசூதியை கட்டும் துபாய்.. அக்டோபரில் தொடங்கும் கட்டுமான பணிகள்..!!
உலகிலேயே முதன் முதலாக 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய மசூதி ஒன்றை துபாய் கட்டவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படவிருக்கும் இந்த புதிய 3D மசூதிக்கான கட்டுமான பணிகள் வரும் 2025 ம் ஆண்டு நிறைவடையும் எனவும் தெரிய வந்துள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்படவிருக்கும் இந்த மசூதி 2,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் என்றும், இந்த மசூதி கட்டிமுடிக்கப்படும் பட்சத்தில் 600 வழிபாட்டாளர்கள் இங்கு வழிபடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த 3D மசூதியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் துபாயின் இஸ்லாமிய விவகாரங்கள் துறை கூறியுள்ளது.
மசூதியின் ஆரம்ப கட்டுமான பணிகள் முடிவடைந்ததும், வரும் 2024 ம் ஆண்டில் ரோபோடிக் பிரிண்டரை பயன்படுத்தி 3D அச்சிடும் பனி துவங்கும் எனவும், மூன்று தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு இந்த ரோபோடிக் பிரிண்டர் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரோபோடிக் பிரிண்டர் ஆனது, மூலப்பொருட்கள் மற்றும் தனித்துவமான கான்கிரீட் கலவையுடன் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு சதுர மீட்டர் கட்டுமானத்தை அச்சிடும் திறன் கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது.
துபாயில் கட்டப்படவிருக்கும் இந்த புதிய 3D மசூதிக்கான கட்டமைப்பை, இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நான்கு மாதங்களில் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.