துபாயில் புதிதாக திறக்கப்பட்டுள்ள “வியூ பாய்ண்ட்”.. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்..!!
குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளைக் கவர்வதற்காக பல்வேறு புதிய பொழுதுபோக்கு இடங்களை சமீப காலமாக துபாய் அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக தற்பொழுது துபாயின் பழம்பெரும் இடமான துபாய் க்ரீக்கில் புதிதாக ஒரு வியூ பாய்ண்ட் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
துபாய் க்ரீக் துறைமுகத்தில் உள்ள வியூவிங் பாயின்ட், டவுன்டவுன் துபாய் மற்றும் அட்ரஸ் கிராண்ட் இரட்டைக் கோபுரங்களுக்கு இடையில் உள்ள இடங்களின் காட்சிகளை வழங்குகிறது. நீர் மட்டத்திலிருந்து 11.65 மீ உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நடைபாதையின் மூலம் துபாய் க்ரீக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் அற்புதமான காட்சியை இங்கு வரும் பார்வையாளர்கள் காணலாம்.
துபாய் க்ரீக் மீது 70 மீட்டர் நீளமுள்ள இந்த பாலமானது, தண்ணீருக்கு மேல் 26 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலமானது துபாய் க்ரீக் ஹார்பர் மாஸ்டர்பிளானின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய பகுதியானது க்ரீக் பகுதியின் அதிகளவு மக்கள் கூடும் நடைபாதைகளில் ஒன்றின் முடிவில் அமைந்துள்ளது. அத்துடன் இந்த இடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் வர்ணம் பூசப்பட்ட எஃகு மூலம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை இலவசமாக அணுக முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.