வளைகுடா செய்திகள்

குடிமக்கள் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் பணிபுரிய அனுமதி..!! கேள்விக்குறியாகும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலை..!! சவூதியில் வெளியான புதிய அறிவிப்பு..!!

சவூதி அரேபியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு சவூதி குடிமக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில் சவூதி நாட்டவர் ஒருவர், இரண்டு வேலைகளில் பணிபுரியலாம் என்ற அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. சவூதியின் தொழிலாளர் ஆணையத்தின் அதிகாரிகள் (labour authorities) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தற்போது, சவூதி அரேபியாவில் உள்ள குடிமக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சவுதி அரேபிய குடிமக்கள் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்யலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றிய ஒரு அறிவிப்பில் சவூதி அரேபியாவின் குடிமக்கள் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் பணிபுரிவதற்கு எந்தவித சட்டப்பூர்வ நிபந்தனைகளும் கிடையாது என்பதை மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resources and Social Development) உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், சவூதி நாட்டவர் ஒருவர் சமூக காப்பீட்டுக்கான பொது அமைப்பில் இரண்டு முறை வேலை குறித்து பதிவு செய்திருந்தால், அந்த நபர் முதலில் பணிபுரிய ஆரம்பித்த பணியிடம் மட்டுமே வேலைவாய்ப்புக்கான விகிதத்தை கணக்கிடும் போது கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

சுமார் 34.8 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்டுள்ள சவூதி அரேபியா, புலம்பெயர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களின் தாயகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், சமீபகாலமாக “சவூதிமயமாக்கல் (Saudisation)” என்ற தொழிலாளர் கொள்கையின் ஒரு பகுதியாக கல்வி, தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களை நீக்கி அதற்கு பதிலாக சவூதி நாட்டு குடிமக்களை பணியமர்த்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இது சம்பந்தமாக கடந்த ஜூன்2022-இல் சவூதி குடிமக்களுக்கு மட்டுமே சில துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று ஆணைகள் (ministerial decrees) வெளியிடப்பட்டிருந்தன. அந்த ஆணைகளின்படி, ஆப்டிக்ஸ், வாடிக்கையாளர் சேவைகள் (customer services), துணை விமானிகள், விமானக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட உரிமம் பெற்ற விமானத் தொழில்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் கார் சோதனைகள் போன்ற துறைகளில் சவூதி குடிமக்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

அத்துடன் சவூதி அரேபிய அரசு தனது நாட்டவர்களுக்கான பிராந்திய வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், கடந்த டிசம்பரில், நாடு முழுவதும் அஞ்சல் சேவைகள் மற்றும் பார்சல் போக்குவரத்துக்கான வேலைவாய்ப்புகளையும் சவூதி குடிமக்களுக்கே வழங்கும் மற்றொரு ஆணை நடைமுறைக்கு வந்துள்ளது.

அதுபோல, சவூதிமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்ற மாதம் புனித நகரமான மதீனாவில் பல தொழில்களை உள்ளூர்மயமாக்க சவூதி அரேபியாவின் மனித வள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சவூதி குடிமக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக உள்துறை அமைச்சகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து “ஊக்குவிக்கும் மற்றும் உற்பத்தி (motivating and productive)” என்ற திட்டத்தை அமைச்சகம் பின்பற்றுவதாகத் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இத்திட்டத்தின்படி, நகரத்தில் உள்ள பெரும்பாலான உணவகங்களின் மொத்த மனிதவளத்தில் 40 சதவிகிதம் சவூதி நாட்டவர்களையும், காஃபிஷாப்கள், உணவுகள் மற்றும் பானங்களுக்கான மொத்த விற்பனை கடைகளில் (food and beverage wholesale outlet) தலா 50 சதவிகிதம் சவூதி நாட்டவர்களையும் பணியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!