குவைத்தில் வசித்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த பெண் மற்றும் இரு பிள்ளைகள் உயிரிழப்பு.. மன அழுத்தத்தால் விபரீத முடிவு..!!
குவைத்தில் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அகிலா கார்த்தி எனும் பெண்மணி தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் குவைத்தில் உள்ள ஃபஹாஹீல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரின் 12 வயது மகளும் 10 வயது மகனும் குவைத்தில் உள்ள இந்திய பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
அகிலாவிற்கு ஏற்கெனவே மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை இருந்து அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 19) அவரது கணவர் வேலைக்கு சென்றிருந்த போது தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு குடியிருப்பு கட்டிடத்தின் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அவரது கணவருக்கு தெரியப்படுத்தியதுடன் அவர் தனது மகளின் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்ததாக தகவல்கள் கூறப்படுகின்றது. இது பற்றி காவல்துறையினர் தெரிவிக்கையில் தற்கொலை செய்து கொண்ட பெண்மணியின் தங்குமிடம் சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாகவும் வீட்டினுள் இருந்து எந்தவித பதிலும் இல்லாத காரணத்தினால் கதவை உடைத்து பார்த்த போது இரு குழந்தைகளும் இறந்து கிடந்ததாகவும் கூறியுள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட அகிலா கார்த்தியும் அவரது கணவரும் இஞ்சினீயர்கள் என்பதும் அதில் அகிலா தமிழ் அசோசியேஷன் குவைத்தில் உறுப்பினராக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.