வளைகுடா செய்திகள்

பேருந்து கவிழ்ந்து தீபிடித்ததால் 20 உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழப்பு.. 29 பேர் காயம்.. சவூதியில் ஏற்பட்ட பயங்கரமான விபத்து..

சவூதி அரேபியாவின் தென்மேற்கு பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீபிடித்ததில் 20 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவமானது நேற்று (திங்கள்கிழமை) சவூதியில் நடந்துள்ளது. இந்த பயங்கரமான பேருந்து விபத்தில் உம்ரா யாத்திரிகர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தானது, ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில் நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவுக்குச் சென்று கொண்டிருந்தனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது.

சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பாலத்தில் மோதி, கவிழ்ந்து, தீப்பிடித்ததாகவும், இதன் காரணமாக 20 பேர் உயிரிழந்ததுடன் 29 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணையில் பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையத்தின் குழுக்கள் மற்றும் ரெட் கிரசண்ட் குழுக்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த பகுதியை சுற்றி வளைத்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!