அமீரக செய்திகள்

மகிழ்ச்சியாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் அதிக மதிப்பெண்களை பெற்ற துபாய், அபுதாபி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு சமீபத்தில் ‘சிட்டிஸ் ஆஃப் சாய்ஸ் – மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் இடத்தில் வாழ்கிறார்களா?’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையில் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இரண்டும் உலகின் தலைசிறந்த நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் ‘சிட்டிஸ் ஆஃப் சாய்ஸ்’ என்ற ஆய்வில், வாஷிங்டன், சிங்கப்பூர், சான் பிரான்சிஸ்கோ, குவாங்சோ, பாஸ்டன், சியாட்டில், அட்லாண்டா, பார்சிலோனா மற்றும் பெர்லின் போன்ற நகரங்களை விட ‘Social Capital’ பரிமாணத்தில் துபாய் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மற்ற நகரங்கள் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆனால் 10 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ‘cruiser weight’ நகரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், துபாய் 100க்கு 74 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது, இது குடியிருப்பாளர்கள் தங்கள் நகரத்தின் மீது வலுவான உணர்வையும், பற்றுதலையும் கொண்டிருப்பதையும் அவர்கள் அர்த்தமுள்ள சமூக உறவுகளைப் பேணுவதையும் பிரதிபலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது ‘Social Capital’ என்பது ஒரு நகரத்திற்குள் வசிக்கும் மக்கள் எந்த அளவிற்கு சமூக ஈடுபாட்டுடன் மற்றவர்களிடம் பழகுகிறார்கள் மற்றும் சமூக உறவுகளின் வலிமை போன்றவற்றை அளவிடுகிறது. இது சமூக தொடர்புகள், உள்ளடக்கம், சமத்துவம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் அடையாளம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து BCG நிர்வாக இயக்குநரும் மூத்த பங்குதாரரும், அறிக்கையின் இணை ஆசிரியருமான Vladislav Boutenko என்பவர் கூறுகையில், ஒரு நகரம் எவ்வாறு சிறப்பாகச் செயல்படுகிறது-அல்லது இல்லை என்ற நுணுக்கங்களை அறிக்கை ஆய்வு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு நகரத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பயர்வது என்பது முன்பை விட இப்போது மிக எளிதானது, எனவே நகர்ப்புறத் தலைவர்கள் தங்களுடைய குடியிருப்பாளர்களை தக்கவைத்துக் கொள்வது பெரிய சவாலாக இருக்கும் வேளையில், குடியிருப்பாளர்களின் மகிழ்ச்சியை தீர்மானிப்பதன் மூலம் புதிய குடியிருப்பாளர்களை தங்கள் பகுதிக்கு ஈர்க்க முடியும் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

வாழ்வதற்கு சாதகமான சூழல்:

சமீபத்திய ஆய்வறிக்கையில் ‘பொருளாதார வாய்ப்புகள்’ பரிமாணத்திலும் (100 இல் 71) துபாய் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது, இது வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் செழிக்க ஏற்ற சூழலை இந்த நகரம் வழங்குகிறது என்பதை வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், வேலை வாய்ப்புகள், தொழில், சம்பளம், வணிகத்திற்கான வருமான வாய்ப்புகளில் சமத்துவம் மற்றும் தனிநபர் கடன்கள் கிடைத்தல் போன்றவை துபாயின் நேர்மறையான காரணிகளாக உள்ளன.

அத்துடன் உலகெங்கிலும் உள்ள 79 நகரங்களில் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட மக்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வாழ்க்கைத் தரம், அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் மாற்றத்தின் வேகம் போன்றவற்றில் வாஷிங்டன், சிங்கப்பூர், சான் பிரான்சிஸ்கோ, குவாங்சோ, மாட்ரிட், பாஸ்டன் மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்களுக்குப் பிறகு, ‘குரூஸர் எடை நகரங்களில்’ துபாய் எட்டாவது இடத்தில் உள்ளது.

வணிகத்திற்கு சிறந்த அபுதாபி:

இதற்கிடையில், அபுதாபி 3 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நடுத்தர நகரங்களில் (medium-sized cities)  வகைப்படுத்தப்பட்டுள்ளது. “புதுமை மற்றும் தொழில்முனைவுகளை வளர்க்கும் வணிக-நட்பு சூழல்” மற்றும் ‘பொருளாதார வாய்ப்புகள்’ பரிமாணத்தில் நகரம் 100க்கு 73 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. மேலும், தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் அபுதாபியின் தீவிர முதலீடுகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!