6 வழித்தடங்கள், 84 நிலையங்கள் அடங்கிய மிகப்பெரிய ரியாத் மெட்ரோ திட்டம்.. இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என சவூதி தகவல்..!!
சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் மெட்ரோ திட்டமானது 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அல்லது எதிர்வரும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து ரியாத் மேயர் இளவரசர் பைசல் பின் அப்துல் அஜிஸ் பின் அய்யாஃப் அவர்கள் ஒரு நேர்காணலின் போது பேசுகையில், தலைநகரில் இது வரை செயல்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் ரியாத் மெட்ரோ மிகப்பெரிய திட்டமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, 90 சதவீத பயணங்கள் கார்களை நம்பியிருக்கும் நிலையில், மெட்ரோ திட்டமானது ஆறு வழித்தடங்கள் (6 lines) மற்றும் 84 நிலையங்களுடன் (84 stations) ரியாத்தின் போக்குவரத்து சிரமங்களை போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் ரியாத்தின் நெரிசல் மிகுந்த மத்திய பகுதியில் பொது வாகன நிறுத்த திட்டம் குறித்து, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முதல் கட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இது பயணிகளின் பயண நேரத்தை கணிசமாகக் குறைத்து, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அதிக மக்களை ஈர்க்கும் என்றும் இளவரசர் பைசல் வலியுறுத்தியுள்ளார்.
அதேசமயம், இளவரசர் பைசல் ரியாத்தின் ஸ்ட்ரீட்களில் ஆங்காங்கே நடைபெறும் தோண்டுதல் பணிகள் குறித்த பிரச்சினையை முன்னிலைப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு பகுதிகளுக்கு இடையில் குழிகளை ஒழுங்கமைக்கும் செயல்பாட்டைக் கையாளும் ஒரு மையத்தை நிறுவுவதற்கான மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது, அவை அனைத்தும் ஒரே நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதிசெய்வதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒரு மையத்தை நம்பாமல், செங்குத்து விரிவாக்கம், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் போக்குவரத்து பயணங்களை விநியோகிக்க பல மையங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் புதிய திட்டத்தையும் குறித்து அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.