UAE: அபாயகரமான சூழலின் போதும் சேதமாகாத CCTV.. உலகின் முதல் முறையாக துபாயில் அறிமுகம்..!!
வெடிப்பு, தீ விபத்து போன்ற அபாயகரமான சூழல்களிலும் சேதமடையாமல் இருப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா துபாயில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிச்சிறப்பு மிக்க கேமராக்கள் நெருப்பு, வெடிப்பு போன்றவற்றால் சேதமடையாது என்பதால் பெரும்பாலும் சிறைச்சாலை, இராணுவம், விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமரா, ‘Ex e’ பாதுகாப்பு முறையைப் பயன்படுத்துவதால் , இது எந்த தீப்பொறிகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து ஆக்சிஸ் கம்யூனிகேஷன்ஸின் EMEA இன் கட்டிடக் கலைஞரும் பொறியியல் திட்ட மேலாளருமான ஸ்டீவன் கென்னி, கேமராக்களில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், கேமரா முற்றிலும் காற்று புகாதவாறு சீல் செய்யப்பட்டுள்ளதாகவும் வலுவான துருப்பிடிக்காத எஃகு வகைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த கேமராக்கள் முன்கூட்டியே நிறுவப்பட்ட வெடிப்பு, தீ போன்றவற்றை கண்டறியும் பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது. வெப்பநிலை அளவீடுகளைக் கண்டறியும் திறன் கொண்டுள்ளதால் தவறான அலாரங்களைக் குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கேமராக்கள் நீடித்த மற்றும் வானிலைக்கு ஏற்ப செயல்படும் திறன் கொண்டுள்ளன. அதேசமயம், 4K தெளிவுத்திறனில் 60 Fbs வரை சிறந்த வீடியோ தரம் மற்றும் எந்த ஒளி நிலையிலும் விரிவான படங்களையும் வழங்குகின்றன என்று கூறியுள்ளார். மேலும் மத்திய கிழக்கு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் இருப்பதால், தற்போது இவை சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.