அமீரக செய்திகள்

ரமலானை முன்னிட்டு 971 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவிட்ட துபாய் ஆட்சியாளர்..!!

ரமலான் மாதத்தை முன்னிட்டு, துபாயின் சீர்திருத்த மற்றும் தண்டனை நிறுவனங்களில் இருந்து 971 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மன்னிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்த கைதிகள் பல்வேறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர்களை விடுவிக்கும் இந்த சைகையானது அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும் ஷேக் முகமதுவின் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்று துபாயின் அட்டர்னி ஜெனரல் வேந்தர் எஸ்ஸாம் அல் ஹுமைதான் கூறியுள்ளார்.

இந்த மன்னிப்பு, விடுதலை செய்யப்பட்ட கைதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கத்தைப் பெறுவதற்கும், சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைவதற்கும் வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் துபாய் பப்ளிக் ப்ராசிகியூஷன், துபாய் காவல்துறையுடன் இணைந்து, ஷேக் முகமதுவின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நடைமுறைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக அல்-ஹுமைதான் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒவ்வொரு எமிரேட்டின் ஆட்சியாளர்களும் குறிப்பிடத்தக்க இஸ்லாமிய நிகழ்வுகளின் போது கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது பொதுவான நடைமுறையாகும். இதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், 1,025 கைதிகளை சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார். இதேபோல், ரமலான் மாதத்தை முன்னிட்டு, 151 கைதிகளை விடுதலை செய்ய அமீரக உச்ச கவுன்சில் உறுப்பினரும், ஃபுஜைரா ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் ஹமத் பின் முகமது அல் ஷர்கி உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!