அமீரக செய்திகள்

அமீரகத்தின் இளம் சாதனையாளர் விருதை வென்று 9 வயது தமிழக மாணவி அசத்தல்..! – சாதித்தது என்ன..?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர், அமீரகம் முழுவதும் மேற்கொண்டு வரும் அவர்களின் சமூகப்பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொண்டு பணிகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஷார்ஜாவில் உள்ள டெல்லி பிரைவேட் ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த ஒன்பது வயது மாணவியான கன்ஷிகா மணிகண்டன் (Kanshika Manikandan) என்பவர், அவரது சமூக சேவை மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்காக அமீரகத்தின் இளம் சாதனையாளருக்கான ‘தி டயானா (The Diana)’ விருதை வென்று அசத்தியுள்ளார்.

கன்ஷிகா தனது இளம் வயதிலேயே அமீரகத்தில் பல்வேறு தொண்டு பணிகளை செய்து வருகிறார். அதில், புற்றுநோயாளிகளுக்கு தலைமுடியை தானம் செய்தல், மார்பக புற்றுநோயைக் கண்டறிவதற்கான விழிப்புணர்வு சுவரொட்டிகளை உருவாக்குதல், தொழிலாளர்களுக்கு இப்தார் உணவுப் பொட்டலங்களை விநியோகித்தல் மற்றும் அமீரகத்தில் காஃப் மரங்களை நடுதல் போன்ற தனது செயல்களின் மூலம் நாடு முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இளம் ஹீரோக்கான விருதை வென்றது குறித்து கன்ஷிகா பேசுகையில், தான் செய்த சமூக சேவை மற்றும் மனிதநேய முயற்சிகளுக்கு, உலகளவில் புகழ்பெற்ற ஒரு நிறுவனம் அளித்துள்ள அங்கீகாரத்திற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்த விருது சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட தனக்கு உற்சாகம் அளிப்பதாகவும் கூறினார்.

அத்துடன், வரும் காலத்தில் விஞ்ஞானியாக ஆகுவதற்கு ஆசைப் படுவதாக கூறிய கன்ஷிகா, உலக அமைதியை நோக்கி உழைக்க வேண்டும் என்பதும் அவரது எதிர்கால இலட்சியம் என்றும் குறிப்பிட்டார். தற்போது, ஷார்ஜாவில் தனது பெற்றோருடன் வசித்து வரும் கன்ஷிகாவின் சொந்த ஊர் சென்னை ஆகும். அவரது தந்தையான மணிகண்டன் HR மற்றும் நிதித்துறையிலும், அவரது தாயார் கட்டிடக் கலைஞராகவும் துபாயில் பணிபுரிந்து வருகின்றனர்.

மாணவி கன்ஷிகா குறித்து அவரது தந்தை மணிகண்டன் விவரிக்கையில், சிறுவயது முதலே மிகுந்த ஆர்வத்துடன் மறுசுழற்சி பிரச்சாரங்கள், தூய்மைப்படுத்தும் இயக்கங்கள், மரம் நடும் இயக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகளில் கன்ஷிகா அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், சமூகப் பணிகள் மட்டும் அல்லாமல் படிப்பிலும், திறன் சார்ந்த போட்டிகளிலும் பல சாதனைகளை கன்ஷிகா புரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதில் KENKEN நேஷனல் சாம்பியன்ஷிப், அவரது பள்ளியில் நடைபெற்ற கிரியேட்டிவ் ஆர்ட் விருதுக்கான போட்டி, சுடோகு போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்று விருதுகளையும் வென்றுள்ளார்.

மேலும், இந்த இளம் வயதிலேயே குழந்தை ஆசிரியராக “Magical Mangroves” எனும் புத்தகத்தையும் கன்ஷிகா மணிகண்டன் எழுதியுள்ளார். இந்த புத்தகம் தற்போது உலகளவில் Amazon தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது என்பதும் கன்ஷிகா புரிந்த சாதனைகளில் மிகச்சிறந்த ஒன்றாகும்.

அமீரகத்தில் சமூக பணிகளில் ஈடுபட்டுவரும் இளம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இந்த ‘தி டயானா’ விருதானது, இங்கிலாந்து நாட்டின் முன்னாள் இளவரசியான பிரின்சஸ் டயானாவின் நினைவாக, அவரது மகன்களான HRH தி பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மற்றும் தி டியூக் ஆஃப் சசெக்ஸ் ஆகியோரின் ஆதரவுடன் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!