புதிதாக இரண்டாவது டெர்மினலை திறப்பதற்கு தயாராகும் குவைத் சர்வதேச விமான நிலையம்!!!
குவைத் சர்வதேச விமான நிலையத்தில், முழுவதும் இயற்கையாற்றலால் இயங்கக்கூடிய T2 எனப்படும் புதிய பயணிகள் முனையத்தை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது என்று குவைத்தின் செய்தித்தாள் நிறுவனமான அல்-ராய் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த டெர்மினல் முழுவதும் ‘LEED கோல்ட் சர்டிஃபிகேட்’ பெறுவதற்கான முயற்சியின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது முழுக்க முழுக்க புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் இருக்கும் கட்டிட அமைப்பிற்கு ‘LEED கோல்ட் சர்டிபிகேட்’ அரசாங்கத்தால் வழங்கப்படும். அதற்கேற்றார் போல், இந்த டெர்மினல் முழுவதும் சூரிய சக்தியால் இயங்கும் அளவிற்கு கூரை முழுவதும் ஒளி மின்னழுத்த பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் ஆண்டுதோறும் 25 மில்லியன் பயணிகளை கையாளும் அளவிற்கு இதன் திறன் உள்ளது என்றும் இதில் 51 போர்டிங் கேட்கள் பொருத்தப்படும் அளவிற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. விமானத்தின் பார்க்கிங் வசதிக்கும் அதிகமான அளவு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ஒரே நேரத்தில் 21 ஏர்பஸ் மற்றும் A380 விமானங்களுக்கு இடமளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் மட்டும் அல்லாமல், முபாரக் அல்-கபீர் துறைமுகத்தையும் சீரமைக்கும் முயற்சியில் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டத்தில் 1.8 மில்லியன் கண்டைனர்கள் , இரண்டாம் கட்டத்தில் ஆண்டுக்கு 2.7 மில்லியன் கண்டைனர்கள் மற்றும் மூன்றாவது கட்டத்தில் 3.6 மில்லியன் கண்டெய்னர்களை கையாளும் அளவிற்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விமான முனையத்தின் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இது திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.