பால்கனியில் இருந்து கீழே விழுந்து 14 வயது இந்திய சிறுவன் உயிரிழப்பு..!! பஹ்ரைனில் நடந்த துயர சம்பவம்..!!
பஹ்ரைன் நாட்டில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் குடியிருப்புக் கட்டிடத்தின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கண்ணூரில் உள்ள பழையங்கடியைச் சேர்ந்தவர் ஷஜீர் மற்றும் ஃபயிசா ஆகிய இருவரும் தனது மகனுடன் பஹ்ரைனில் உள்ள ஜஃபேர் நபரில் வசித்து வந்துள்ளனர். தற்போது 14 வயது ஆகும் சயான் அஹமது பஹ்ரைனில் உள்ள நியூ மில்லினியம் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இந்த குடும்பத்தினர் சமீபத்தில் தான் ஓமானில் இருந்து பஹ்ரைனிற்கு இடம்பெயர்ந்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தனது குடியிருப்புக் கட்டிடத்தின் 11-வது மாடியில் இருந்து கீழே விழுந்து சயான் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சயானின் உடலானது தற்பொழுது சல்மானியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால்கனியில் இருந்து சிறுவர்கள் தவறி கீழே விழுந்து இறக்கும் சம்பவம் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது குறித்து அதிகாரிகள் பல முறை குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வு அளித்த வண்ணமே உள்ளனர். இருப்பினும் ஒரு சில சமயங்களில் இது போல அசம்பாவிதங்கள் நடப்பது பதற்றத்தையும் சோகத்தையும் அனைவருக்கும் ஏற்படுத்துகிறது.