பொதுவெளியில் பராமரிப்பின்றி நிறுத்தப்பட்ட கார்களுக்கு 3,000 திர்ஹம் அபராதம்!! வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியில் முனிசிபாலிட்டி அதிகாரிகள்….
அபுதாபியின் அல் தஃப்ரா பகுதியில் உரிமையாளர்களால் கைவிடப்பட்டு ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அபுதாபியின் மேற்கே அமைந்துள்ள இந்த பகுதியானது இதற்கு முன்னதாக Western Region என்று அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியில் கடந்த சில தினங்களாக முனிசிபாலிட்டி அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். அதில் பொது இடங்கள் மற்றும் பார்க்கிங்கில் கேட்பாரற்று பல நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த கைவிடப்பட்ட கார்களை அப்புறப்படுத்த இருப்பதாக முனிசிபாலிட்டி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், சுகாதார சீர்கேட்டை தடுக்க கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு ஆய்வுகளின் போது அதிகாரிகள் விவரித்துள்ளனர். முதல் கட்டமாக முறையான பராமரிப்பின்றி, நீண்ட காலமாக யார்டுகளில் நிறுத்தப்பட்டிருக்கும் கைவிடப்பட்ட தூசி நிறைந்த கார்களில் அதிகாரிகள் எச்சரிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டும் புகைப்படங்களை அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனமான Wam வெளியிட்டுள்ளது.
அவர்களில் சிலர் பார்க்கிங்கிலும், மற்ற சிலர் தங்களின் வீடுகளுக்கு முன்பாகவும் வாகனங்களை பராமரிப்பின்றி நிறுத்திவைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அமீரகத்தை பொறுத்தவரையிலும் கார்களை பொதுவெளியில் கைவிடுவது 3,000 திர்ஹம் அபராதம் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் குற்றமாகும்.
அல் தஃப்ராவில் நடத்தப்படும் இந்த பிரச்சாரம், விழிப்புணர்வை அதிகரிப்பதைத் தவிர, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதையும், இடங்களை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பதையும் மற்றும் நாட்டில் நிலையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாக முனிசிபாலிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களின் தூய்மையை எப்போதும் பராமரிக்குமாறும், அவற்றை நீண்ட நாட்கள் பொதுவெளியில் கைவிடுவதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.