முதல் முறையாக பூக்களுக்கான ஃபெஸ்டிவலை நடத்தும் ஓமான் அரசு… சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை..!!
ஓமானில் தற்போதைய கரீஃப் சீசனை (Khareef Season) ஒட்டி பூக்கள் மற்றும் இயற்கையை கொண்டாடும் விதத்தில் “ப்ளூம் ஹவானா சலாலா” என்ற ஃபெஸ்டிவலை 2023 ஆம் ஆண்டு முதல் கொண்டாடலாம் என்ற முடிவினை ஓமன் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இந்த திருவிழாவின் முதல் பதிப்பானது கடந்த ஜூலை 27, 2023 வியாழன் அன்று தொடங்கப்பட்டுள்ளது.
ஓமான் அரசின் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா அமைச்சகம், தைசீர் தளத்துடன் இணைந்து, பல அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தோஃபரா கவர்னரேட்டில் கரீஃப் சீசன் 2023 இன் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக “ப்ளூம் ஹவானா சலாலா” விழாவை (பூக்கள் மற்றும் வாழ்வின் திருவிழா) ஏற்பாடு செய்துள்ளன.
10,000 பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த திருவிழாவானது ஆகஸ்ட் 11 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவானது ஓமான் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் மேதகு பைசல் பின் அப்துல்லா அல் ரவாஸ் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த விழாவின் நோக்கமாகும்.
எனவே அனைத்து வயதினரும் கண்டு களிக்கும் வகையில் இயற்கையின் வளங்களை போற்றும் பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலர் மற்றும் தாவரங்களின் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், அரிய தாவரங்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் வடிவில் தோட்டம், பாரம்பரிய உணவுகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்த திருவிழாவில் பூக்களின் கண்காட்சி, சந்தை மற்றும் பார்வையாளர்கள் புகைப்படங்கள் எடுக்க பல்வேறு கலை மாதிரிகள் மற்றும் ஃபிரேம்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் விழாவின் போது, மலர் ஏற்பாடு மற்றும் நாற்று நடுதல் ஆகிய துறைகளில் பயிற்சி நிகழ்ச்சிகளும், யோகா மற்றும் தனித்திறன் விளக்கங்களும் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின் மூலம், கரீஃப் பருவத்தில் தோஃபர் கவர்னரேட்டில் உள்ள பல்வேறு இடங்கள் மற்றும் தளங்களில் சுற்றுலாவை மேம்படுத்தமுடியும் என்று அதிகாரிகள் அளித்த வழிகாட்டுதலின்படி முதல்முறையாக திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், இது வெற்றியடையும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் ஓமான் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.