‘Habibi Come to Dubai’ வெறும் 6 மாதங்களில் உலகின் மூலைமுடுக்கில் இருந்து 8.55 மில்லியன் பார்வையாளர்கள் துபாய்க்கு வருகை புரிந்து சாதனை…!!
உலகின் பல்வேறு மூலைமுடுக்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதில் துபாய் தற்பொழுது சாதனை படைத்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும்பாலும் சுற்றுலாவிற்கு துபாயையே தேர்வு செய்கின்றனர். இங்குள்ள பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நவீன நகரின் அழகியல் தோற்றமும் உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
அதே போல் உலகளவில் சுற்றுலாவிற்கு செல்ல நினைப்பவர்களின் எண்ணத்தில் துபாய் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. மேலும் சர்வதேச அளவில் பார்வையாளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களையும் துபாய் செயல்படுத்தி வருகின்றது.
இந்நிலையில் துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறையால் (Department of Economy and Tourism) வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் படி, Covid-19 தொற்றுக்கு முந்தைய பயணிகளின் எண்ணிக்கையை விட தற்பொழுது பயணிகளின் மிஞ்சியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 8.55 மில்லியன் சர்வதேச சுற்றுலாவாசிகளை துபாய் வரவேற்றுள்ளது என கூறப்பட்டுள்ளது. இது தொற்றுநோய்க்கு முன்பான கடந்த 2019 இன் முதல் அரையாண்டு எண்ணிக்கையான 8.36 மில்லியனை விட அதிகம் ஆகும். இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது.
இது தொழில்துறையின் சிறந்த H1 செயல்திறனைக் (performance) குறிக்கிறது. அதாவது, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட H1 2023 இல் எமிரேட்டின் ஹோட்டல்கள் சிறப்பாக செயல்பட்டதே இதற்குக் காரணம். மேலும், சராசரி ஹோட்டல் ஆக்கிரமிப்பு 78 சதவீதமாக இருந்துள்ளது, இது உலகிலேயே அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
2023இல் முதல் அரையாண்டின் இந்த வளர்ச்சியானது, துபாயில் இந்த ஆண்டு தொற்றுநோய்க்கு முந்தைய சர்வதேச சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையில் 80-95 சதவீதத்தை எட்டும் என்ற ஐ.நா உலக வர்த்தக அமைப்பின் கணிப்பை முறியடித்துள்ளது.
மேலும், இந்த முன்னேற்றம் துபாயை முக்கிய உலகளாவிய சுற்றுலாத் தலமாக உயர்த்திக்காட்டுவதுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் நிறுவனங்களுக்கான முக்கிய மையமாகவும் அதன் நிலையைக் குறிக்கிறது என்றும், துபாயின் தலைமையின் தொலைநோக்கு பார்வையால் இந்த சாதனை சாத்தியமானது என்றும் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறியுள்ளார்.
அமீரக பிரதமரும் துணைத்தலைவரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையிலான துபாய் பொருளாதார அஜெந்தா (Dubai Economic Agenda D33), துபாயின் அந்தஸ்தை வலுவூட்டுவதற்காக ஒரு இலட்சியப் பாதையை கோடிட்டுக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்தாண்டின் முதல் பாதியில் துபாய் படைத்த சாதனைக்கு மேற்கு ஐரோப்பா குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது. இது மொத்த சர்வதேச சுற்றுலாவாசிகளின் வருகையில் 20 சதவீதமாகும். அதுபோல, ஒருங்கிணைந்த பிராந்தியங்களின் பங்களிப்பில் GCC மற்றும் MENA பிராந்தியங்கள் 28 சதவீத வருகையைப் பதிவு செய்துள்ளன.
இதனையடுத்து, தெற்காசியா 17 சதவீதமும், CIS மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இணைந்து 14 சதவீதமும் பங்களித்துள்ளன. மேலும், வட மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை 8 சதவீதம், அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை முறையே 7 சதவீதம், 4 சதவீதம் மற்றும் 2 சதவீதம் என்ற விகிதத்தில் அடுத்தடுத்த பங்களிப்பாளர்களாக உள்ளன.
சிறப்பாக செயல்பட்ட ஹோட்டல்கள்:
துபாயின் ஹோட்டல்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு, சராசரி தினசரி விகிதம் (Average Daily Rate-ADR), கிடைக்கும் அறைக்கான வருவாய் (Revenue Per Available Room-RevPAR) மற்றும் தங்கியிருக்கும் காலம் உள்ளிட்ட அனைத்து அளவீடுகளிலும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவாகிய ஹோட்டல்களின் செயல்திறனும் இந்தாண்டின் முதல் அரையாண்டில் ஹோட்டல்களின் செயல்திறனும் பின்வரும் அட்டவணையில் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.
2019 H1 | 2023 H1 | |
ஆக்கிரமிப்பு | 75.8% | 78% |
கிடைக்கும் ஹோட்டல்கள் | 714 | 810 |
கிடைக்கும் அறைகள் | 1,18,345 | 1,48,689 |
தங்குவதற்கான சராசரி காலம் | 3.5 இரவுகள் | 3.9 இரவுகள் |
ADR | 444 திர்ஹம் | 534 திர்ஹம் |
RevPAR | 336 திர்ஹம் | 415 திர்ஹம் |