ஓமான்: ரூம் இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் வெளிநாட்டவர் ஒருவர் மரணம்… !!
ஓமானில் நேற்று (ஆகஸ்ட் 22ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை) தோஃபர் கவர்னரேட்டிலுள்ள மிர்பத் விலாயத்தில் பழைய அறை ஒன்று இடிந்து விழுந்ததில் கட்டுமானத் தொழிலில் ஒரு வெளிநாட்டு தொழிலாளி இறந்துவிட்டார் என்று சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் ஆணையம் (CDAA) தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, பெரும் சிரமத்திற்கு பின்பு இடுப்பாடுகளுக்கு அடியில் இருந்து தொழிலாளியின் உடலை வெளியே எடுத்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பிற்பகல் குப்ராவில் உள்ள முன்னணி வணிக வளாகம் ஒன்றின் அருகே பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் சரியாக புலப்படாத நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் உடனடியாக விரைந்தனர். தீயை கட்டுப்படுத்தும் பணியின் பொழுது சாலைகள் மூடப்பட்டதால் குப்ரா தெரு மற்றும் சுல்தான் கபூஸ் தெருவில் நேற்று பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் மக்களுக்கு பெரிதாக காயம் எதுவும் இல்லை என்பதை CDAA உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மின்சாதனங்களை தொடர்ந்து பராமரிக்கவும், பயன்படுத்திய பின் உடனடியாக அணைக்குமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.