துபாய் Naif ஏரியாவில் உள்ள ஹோட்டலில் தீவிபத்து.. 2 பேர் மரணம்..!!

துபாயில் உள்ள நைஃப் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் உண்டான புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருவர் உயிரிழந்ததாக துபாய் ஊடக அலுவலகம் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில் தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்த ஆறு நிமிடங்களுக்குள், துபாய் சிவில் தற்காப்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்து கட்டிடத்தில் இருந்த மக்களை வெளியேற்றினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவில் பாதுகாப்பு பொது இயக்குநரகமானது இந்த தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இருப்பினும் இறந்தவர்களின் விபரங்கள் தற்பொழுது வெளியாகவில்லை.
துபாயில் இருக்கும் தமிழ் பஜார் என்றழைக்கக்கூடிய தேராவை ஒட்டிய நைஃப் பகுதியானது தமிழர்கள் பெரும்பாலானோர் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.