அமீரக செய்திகள்

அமீரகத்தில் மரணிக்கும் இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடு..!! இந்திய துணைத்தூதரகம் அறிவிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் போது திடீரென உயிரிழக்கும் இந்திய வெளிநாட்டவர்களின் உடல்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய விதிகளில் ஒன்றாக இறந்தவருக்கு இரத்த உறவு முறை கொண்ட உறவினர் அல்லது வழக்கறிஞரின் அதிகாரம் கொண்ட நபர் மட்டுமே தேவையான ஆவணங்களை ரத்து செய்து ஆவணங்களில் கையெழுத்திட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், புதிய விதியின் படி இந்திய துணைத் தூதரகத்திலிருந்து இறந்தவரின் உடலை திருப்பி அனுப்புவதற்கான நிதியை விடுவிக்க வேண்டி, பஞ்சாயத்து அலுவலகங்கள் உட்பட இந்தியாவிலுள்ள ஐந்து வெவ்வேறு அதிகாரிகளிடமிருந்து அனுமதிக்கான கையொப்பங்களை பெற வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் நடந்த சில சம்பவங்களுக்குப் பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தூதரக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதற்காக சில முகவர்கள் இறந்து போனவரின் குடும்பங்களிடம் பணம் பறித்ததாக பல வழக்குகளை தூதரகம் சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், “துணைத் தூதரகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களுக்குப் பதிலாக அதிகப்படியான தொகையை வசூலிக்கும் மோசடி முகவர்கள் குறித்து இந்திய குடியிருப்பாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றும் துபாயில் உள்ள துணைத்தூதரகம் இந்திய வெளிநாட்டவர்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், துக்கமடைந்த குடும்பங்கள் மற்றும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு அணுகல் மற்றும் வசதிகளை வழங்குவதற்கு தூதரகம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், இதற்காக அனைத்து எமிரேட்களிலும் உள்ள துணைத்தூதரகத்தின் குழு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சேவைக் கட்டணமின்றி இந்த சேவைகளை வழங்குகிறார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

இது குறித்து பல தசாப்தங்களாக இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும் சமூக சேவகர்கள் கூறுகையில், இந்த புதிய விதிகள் குடும்பங்கள் மீது நியாயமற்ற சுமையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், இப்போது ஆவண ரத்து அல்லது மரணம் தொடர்பான பிற பிரச்சினைகளில் எந்தவொரு குடும்பத்திற்கும் உதவ சமூக சேவையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென ஏற்படும் ஒரு மரணம் எப்போதுமே இதயத்தை உடைக்கும் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்கள் அல்லது நண்பர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருப்பார்கள், இவ்வாறான இருண்ட நாட்களில் சமூக சேவையாளர்கள் அவர்களுக்கு பெரும் ஆதரவாக இருந்து வந்துள்ளனர், தற்போது அவர்களுக்கு உதவுவதைத் தடுப்பது குடும்பங்களின் மீது நியாயமற்ற சுமையை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்திய அரசாங்கத்தால் 2015 ஆம் ஆண்டு தனது சேவைகளுக்காக பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்ற இந்திய நாட்டவரான அஷ்ரஃப், மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துணைத் தூதரகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் மோசடியான சமூக சேவகர்கள் இருந்தால், அவர்களின் சேவைகளை ரத்து செய்யுங்கள் என்றும் அனைவருக்கும் உதவி செய்ய தடை விதிப்பது சரியல்ல என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக இறந்தவரின் ஆவணங்கள் ஒரு நாளில் எளிதாக முடிக்கப்பட்டன, ஆனால் இப்போது பஞ்சாயத்து அலுவலகங்கள் உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு அதிகாரிகளிடமிருந்து கையொப்பங்கள் தேவைப்படுகின்றன, இதனால் அமீரகத்தில் உள்ள பிணவறையில் இறந்தவர்களின் உடல்கள் தேங்கி கிடக்கின்றன என இந்த பணியை இதுநாள் வரையிலும் நேர்மையான முறையில் சமூக சேவையாக செய்து வந்த பலரும் கூறியுள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!