அமீரக சட்டங்கள்அமீரக செய்திகள்

UAE: விசிட் விசாக்களில் பணிபுரியும் நபர்களை கண்டறிய நேரடி ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்.. பயண முகவர்கள் எச்சரிக்கை…

ஐக்கிய அரபு அமீரகத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் காலாவதியான விசாவுடன் தங்கியிருப்பது கடுமையான தண்டனைகளுக்குரிய குற்றமாகும். இந்நிலையில், துபாயிலுள்ள அதிகாரிகள், விசிட் விசாக்களில் பணிபுரியும் தனிநபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை சமீபத்தில் கணிசமாக தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும், எனவே, விசிட் விசாக்களில் வேலை செய்ய வேண்டாம் என்றும் பயண முகவர்கள் எச்சரிக்கின்றனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை, எமிரேட்டில் விசிட் விசாக்கள் காலம் முடிந்த பிறகு கூடுதல் காலம் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து ஸ்மார்ட் டிராவல்ஸின் பொது மேலாளர் சஃபீர் முகமது பேசுகையில், நிறுவனத்தின் வளாகங்கள் அடிக்கடி ஆய்வு செய்யப்படுவதாகவும், ஆய்வுக் குழுக்கள் சமீபத்திய மாதங்களில் பல முறை அலுவலக கட்டிடங்களுக்கு சென்றுள்ளதாகவும் பகிர்ந்து கொண்டார். அமீரகத்தில் விசிட் விசாவில் பணிபுரிவது எப்போதும் சட்டவிரோதமானது என்றாலும், அதிகாரிகள் இப்போது இந்த விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் தொடர்ந்து உறுதிசெய்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் அமலில் இருந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் விசா பொது மன்னிப்புத் திட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு, தங்கள் விசிட் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் முடித்த பிறகு தங்கியிருக்கும் நபர்கள் தங்கள் நிலையை சட்டப்பூர்வமாக்க அல்லது அபராதம் இல்லாமல் வெளியேற அனுமதித்தது.

இந்த நிலையில் பொது மன்னிப்பு முடிவடைந்ததிலிருந்து, ஜனவரியில் ஆய்வு பிரச்சாரங்களின் போது 6,000 க்கும் மேற்பட்ட விதியை மீறுபவர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும், விசிட் விசாவில் பணிபுரிபவர்களுக்கு நாடு கடத்தல் உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதாகவும் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் விசிட் விசாவிற்குப் பிறகு நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையை பாதிக்கும் மேலாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில் “ஜனவரி மாதத்திலிருந்து, விசிட் விசாவில் காலாவதியாகி தங்குபவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது,” என்று சஃபீர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சமீபத்திய திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தின் படி, முறையான அனுமதியின்றி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் அல்லது அவர்களுக்கு வேலை வழங்காமல் நாட்டிற்குள் கொண்டு வரும் நிறுவனங்களுக்கு 100,000 திர்ஹம்ஸ் முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அதிக அபராதம் விதிக்கப்படும்.

பொதுவாக விசிட் விசாவில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் ரிட்டர்ன் டிக்கெட் அல்லது அபராதங்களுக்கு பணம் இல்லாமல் சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், புதிய விதிகளின்படி, சுற்றுலா விசாக்களில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும் நபர்கள் உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வைத்திருக்க வேண்டும்.

இந்த கடுமையான விதிகள் மற்றும் அதிகரித்த ஆய்வுகளின் மூலம், அதிகாரிகள் சிறந்த இணக்கத்தை உறுதி செய்வதையும், சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் தங்கும் காலத்தை நீட்டிக்கும் பிரச்சினைகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

நாட்டில் விசிட் விசாவில் பணிபுரிவது எப்போதுமே சட்டவிரோதமானது, எனவே அமீரகத்திற்கு வரும் நபர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும் முறையான விசாவுடன் வேலை புரியுமாறும் பயண முகவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!