UAE: ஏப்ரல் மாத பிக் டிக்கெட் டிராவில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்..!! 25 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகப்பெரிய தொகையை பரிசாக வழங்கும் அபுதாபி பிக் டிக்கெட்டின் சீரிஸ் 274 டிராவானது, நேற்று சனிக்கிழமை (மே 3) அபுதாபியில் நடைபெற்றது. இதில் முதல் பரிசான 25 மில்லியன் திர்ஹம் ஜாக்பாட் பரிசுத்தொகையை இந்திய நாட்டவர் ஒருவர் வென்று அசத்தியதாக பிக் டிக்கெட் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், இந்தியாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தாஜுதீன் குஞ்சு எனும் இந்தியரே முதல் பரிசான 25 மில்லியன் திர்ஹம்சை வென்ற அதிர்ஷ்டசாலி என தெரியவந்துள்ளது. இதன் மூலம் அவர் ஒரே நாளில் மில்லியனராக மாறியுள்ளார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று தாஜுதீன் வாங்கிய 306638 என்ற எண்களை கொண்ட டிக்கெட் அவருக்கு இந்த அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது.
மேலும் தாஜுதீனின் வெற்றி, பிக் டிக்கெட் எவ்வாறு உலகம் முழுவதும் உள்ள மக்களின் கனவுகளை நிறைவேற்றுகிறது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக பிக் டிக்கெட் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது வெற்றி குறித்து அவரிடம் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்த போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், பிக் டிக்கெட் டிராவில் 25 மில்லியன் ஜாக்பாட் பரிசை தவிர்த்து, அப்துல் மன்னன், அக்யூலின் வெரிட்டா, மீனா கோஷி மற்றும் சைஃபுதீன் கூனாரி ஆகிய நான்கு அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்கள் நேரடி டிராவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதுடன், அவர்கள் ஒவ்வொருவரும் ரொக்கப் பரிசுகளையும் வென்றுள்ளனர்.
அத்துடன், பிக் டிக்கெட் ஏப்ரல் மாதம் முழுவதும் வாராந்திர மின்-டிராக்களையும் நடத்தியது. அதில் வெற்றி பெறும் ஒவ்வொருவருக்கும் 150,000 திர்ஹம்ஸ் பரிசாக வழங்கப்பட்டது. அதனடிப்படையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஐந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவரும் தலா 150,000 திர்ஹம்ஸ் பரிசை தட்டிச்சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel