இந்திய செய்திகள்

அகமதாபாத் விமான விபத்து: 200க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பு..!! பயணிகள் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் அச்சம்..

இன்று (ஜூன் 12, வியாழக்கிழமை) பிற்பகல் இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171, புறப்பட்ட சில வினாடிகளிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது, இந்த கோர விபத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் அஹமதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

232 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் மதியம் 1:17 மணிக்கு புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மக்கள் தொகை அடர்த்தியான குடியிருப்பு மண்டலமான மேகனிநகர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. சமீபத்திய அறிக்கைகளின் படி, விமானத்தில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் நாட்டவர்கள், 7 போர்த்துகீசியர்கள் மற்றும் 1 கனடியர் உட்பட மொத்தம் 232 பயணிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மீட்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் வெளியிட்ட ஆரம்ப அறிக்கைகளின் படி, விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து இதுவரை 200 க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகவும், விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.

மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் கருகியும் சேதமடைந்த நிலையிலும் இருப்பதால், அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடம் தார்பூருக்கு அருகில் உள்ளது, மேலும் பல கிலோமீட்டர்களுக்கு கடும் புகை வெளியேறியதகாவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அகமதாபாத் மற்றும் லண்டனில் உள்ள குடும்பங்களுக்கு உதவ ஏர் இந்தியா அவசர உதவி எண்ணை அமைத்து ஆதரவு குழுக்களை நியமித்துள்ளது.

அரசு நடவடிக்கை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோருடன் பேசி, அவர்கள் அகமதாபாத்தை அடைந்து நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க உத்தரவிட்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் பேசிய அமித்ஷா, இந்தப் பேரழிவில் மத்திய அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்ததாகக் கூறப்படுகின்றது. விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் பிற முக்கியமான தரவுகளை அதிகாரிகள் மீட்டு வருவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இது போன்ற முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!