கடந்த ஒன்றரை மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் காரணமாக விமான டர்பைன் எரிபொருள் (ATF) விலை உயர்ந்துள்ளதால், டிக்கெட் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் இந்தியா முழுவதும் உள்ள விமானப் பயணிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் அதிக விலைக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக வெளியான சமீபத்திய தகவல்களின் படி, சில உள்நாட்டு வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. குறிப்பாக, பரபரப்பான வழித்தடங்களில் கடைசி நிமிட முன்பதிவுகளுக்கான கட்டணங்கள் சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், சில நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்களுக்கு விலைகள் ஒப்பீட்டளவில் நிலையாகவே உள்ளன என கூறப்படுகின்றது.
கிளியர்ட்ரிப் (Cleartrip) நிறுவனத்தின் தரவுகளின்படி, சராசரி உள்நாட்டு விமானக் கட்டணங்கள் ஏப்ரல் 2025-ல் 5,850 ரூபாயிலிருந்து 2026-ல் 8,450 ரூபாயாக உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், வீகோ (Wego) நிறுவனத்தின் அறிக்கையின்படி, சராசரி முன்பதிவுகள் தற்போது 10,000 ரூபாய் என்ற அளவில் உள்ளன. இது ஆண்டுக்கு ஆண்டு 12 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேசப் பயணங்களில் கட்டணங்கள் மேலும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதே காலகட்டத்தில் டிக்கெட் விலைகள் 52,000 ரூபாயிலிருந்து கிட்டத்தட்ட ரூ.75,000 ரூபாயாக உயர்ந்துள்ளன.
செலவுகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை
பயணிகள் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான ஏடிஎஃப் (ATF) கட்டண உயர்வுக்கு அரசு வரம்பு விதித்துள்ளது, அதே நேரத்தில் சர்வதேச வழித்தடங்களில் கடுமையான கட்டண உயர்வுகளை அனுமதித்துள்ளது. உள்நாட்டுப் பயணிகளைப் பாதுகாப்பதையும், வர்த்தகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ்களுக்கான இணைப்பைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
வரம்பு இருந்தபோதிலும், சில விமான நிறுவனங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அதிகரித்து வருகின்றன:
- ஏர் இந்தியா, நிலையான கட்டணங்களுக்குப் பதிலாக தூரம் சார்ந்த கூடுதல் கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இண்டிகோவும், தூரத்தைப் பொறுத்து 275 ரூபாய் முதல் 950 வரை கட்டணங்களைத் திருத்தியுள்ளது.
ஈரானுடன் தொடர்புடைய மோதலால் எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, விமான நிறுவனங்கள் அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளைச் சமநிலைப்படுத்த முயற்சிப்பதால், இந்த மாற்றங்கள் பயணிகள், குறிப்பாக நீண்ட தூர வழித்தடங்களில் பயணிப்பவர்கள், அதிக கட்டணம் செலுத்த வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், எரிபொருள் விலை நிலவரங்களைக் கண்காணித்து, தேவைப்படும்போது கூடுதல் கட்டணங்களைச் சரிசெய்வோம் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விமான டிக்கெட் கட்டணங்கள் ஏற்கனவே உயர்ந்திருந்தாலும், பருவகால தேவை குறைவாக இருப்பதால், வரும் வாரங்களில் ஒரு பெரிய கட்டண உயர்வு ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், எரிபொருள் விலை அதிகமாகவே இருந்தால், பயணிகள் குறிப்பாக தாமதமாக முன்பதிவு செய்பவர்கள் அல்லது சர்வதேச அளவில் பயணம் செய்பவர்கள் தொடர்ந்து உயர்ந்த டிக்கெட் கட்டணங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று கூறப்படுகிறது. எனவே, விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்வது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாகி வருகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel