அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதலால் பல வாரங்களாக நிலவிய பிராந்திய இடையூறுகளுக்கு மத்தியிலும், துபாயின் விமானப் போக்குவரத்துத் துறை தொடர்ந்து அழுத்தத்தின் கீழ் இயங்கி, சுமார் 6 மில்லியன் பயணிகளைக் கையாண்டிருப்பதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன.
இது தொடர்பாக துபாய் விமான நிலையங்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக அடிக்கடி விமான அட்டவணைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், பிப்ரவரி பிற்பகுதிக்கும் ஏப்ரல் 30-க்கும் இடையில் 32,000-க்கும் மேற்பட்ட விமானங்களும் 213,000 டன் சரக்குகளும் கையாளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மத்திய கிழக்கில் நிலவிய பதற்றங்களால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் (DXB) பயணிகளின் போக்குவரத்து கணிசமாகப் பாதிக்கப்பட்டது.
- மொத்தப் பயணிகள்: 18.6 மில்லியன் (முந்தைய ஆண்டை விட 20.6% குறைவு)
- மார்ச் மாதப் பயணிகளின் எண்ணிக்கை: 2.5 மில்லியன் (65.7% குறைவு)
இந்த வீழ்ச்சி, இடையூறுகளின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது, குறிப்பாக 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, அப்போது துபாய் 95.2 மில்லியன் பயணிகளைக் கையாண்டு ஒரு சாதனை படைத்திருந்தது.
2.5 மில்லியன் பயணிகளுடன் இந்தியா DXB-யின் மிகப்பெரிய சந்தையாகத் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா (1.3 மில்லியன்), இங்கிலாந்து (1.2 மில்லியன்) மற்றும் பாகிஸ்தான் (918,000) ஆகிய நாடுகள் இருந்தன. லண்டன், மும்பை மற்றும் ஜெட்டா ஆகியவை மிகவும் பரபரப்பான இலக்கு நகரங்களாக இருந்தன.
சரக்குகளின் அளவும் 22.7% குறைந்து 399,600 டன்களாக ஆனது, அதே நேரத்தில் விமானங்களின் இயக்கம் 20.8% குறைந்து 88,000 ஆக இருந்தது.
இவ்வாறு குறைக்கப்பட்ட திறன் இருந்தபோதிலும், அண்டை நாடுகளில் கிடைக்கும் வான்வெளியைப் பொறுத்து, விமானப் பாதைகளையும் அட்டவணைகளையும் நிகழ்நேரத்தில் சரிசெய்து DXB தனது செயல்பாடுகளைத் தொடர்ந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், விமான நிறுவனங்கள், தரைவழி கையாளுநர்கள் மற்றும் வான்வழிப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையேயான வலுவான ஒருங்கிணைப்பு, செயல்பாடுகளைத் தொடர உதவியது எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளைதுபாய் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள், பயணிகள் மற்றும் சரக்குகளின் போக்குவரத்தை சீராக வைத்திருக்க முக்கியப் பங்காற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் டிராவல் லக்கேஜ்களை கையாளும் செயல்திறனும் வலுவாக இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. அதாவது, DXBயில் மட்டும் 17.6 மில்லியன் லக்கேஜ்கள் கையாளப்பட்டன, மேலும் 1,000 பயணிகளுக்கு 3.5 என்ற விகிதத்தில் லக்கேஜ்கள் தவறாகக் கையாளப்பட்டுள்ளன, இது உலக சராசரியை விட மிகவும் குறைவாகும்.
ஒரு உலகளாவிய போக்குவரத்து மையமாக துபாயின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. இப்பகுதி வழியாகப் பயணிக்கும் பயணிகளில் சுமார் 70% பேர் மத்திய கிழக்கு மையங்கள் வழியாகவே பயணிக்கின்றனர், இதில் DXB மட்டும் அந்தப் போக்குவரத்தில் சுமார் 32%-ஐக் கையாளுகிறது.
ட்ரான்ஸிட் பயணிகளை அதிகளவில் சார்ந்திருக்கும் இந்த நிலை, சூழ்நிலைகள் சீரடையும்போது விரைவான மீட்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருங்கிணைப்பின் மூலம் விமானப் போக்குவரத்து ஏற்கனவே அதிகரித்து வருவதால், வான்வெளித் திறன் மேம்படும்போது தேவை மீண்டும் அதிகரிக்கும் என துபாய் ஏர்போர்ட்ஸ் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் நீண்டகால விரிவாக்கத் திட்டங்களும் முன்னேறி வருகின்றன. இது, ஒரு முன்னணி உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாகத் தனது நிலையை வலுப்படுத்த வேண்டும் என்ற துபாயின் லட்சியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel