துபாயின் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் டெவலப்பரான எமார் பிராப்பர்டீஸ் (Emaar Properties) நிறுவனத்தின் நிறுவனர் முகமது அலாபார் (Mohamed Alabbar), சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, தனது ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இந்தியர்களைப் பணியமர்த்த விரும்புவதாகக் கூறியதுடன், அதற்கான காரணம் ஒன்றையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்த செய்தியில், நாம் செய்யும் வேலையில் திறமையை விட கடின உழைப்பும் ஒழுக்கமும்தான் முக்கியம் என்று குறிப்பிட்டதுடன், இந்தியர்களைப் பணியமர்த்த அவர் விரும்புவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். துபாயின் மிகப்பெரிய பிராப்பர்டீஸ் நிறுவனத்தின் தலைவர் இவ்வாறு கூறியிருப்பது அமீரகவாழ் இந்தியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற ‘Make It In The Emirates’ எனும் நிகழ்வில் பேசிய அலபார், வலுவான வணிகங்களை உருவாக்குவது மற்றும் கடினமான காலங்களைச் சமாளிப்பது குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்ட போது, இந்தியர்கள் குறித்த இந்த கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.
மேலும், தான் “சராசரி அறிவுத்திறன் கொண்டவன் என்றும், ஆனால் கடின உழைப்பில் மிகவும் வலிமையானவன்” என்றும் அவர் தன்னைப் பற்றி விவரித்ததுடன், தொடர்ச்சியான முயற்சியால்தான் தனக்கும் தனது நிறுவனத்திற்கும் இந்த வெற்றி கிடைத்ததாகவும் கூறியுள்ளார்.
கடின உழைப்பு என்பது நீண்ட நேரம் வேலை செய்வது மட்டுமல்ல என்று கூறியதுடன், உங்கள் வேலையைத் தவறாமல் சரிபார்த்தல், ஒவ்வொரு வாய்ப்பையும் ஆராய்தல், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தல், சரியான குழுவை உருவாக்குதல் ஆகியவையும் கடின உழைப்பில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட சமீபத்திய இடையூறுகளின் போது, எமார் நிறுவனம் ஆட்குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பு இல்லை என்று அதன் ஊழியர்களுக்கு உறுதியளித்தது. இதுபோன்ற கடினமான காலங்களில் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே அதன் நற்பெயரை வரையறுக்கிறது என்றும் அலாபார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel